ஆத்தூர் அருகே சென்டர் மீடியனில் பைக் மோதி இளம்பெண் சாவு

*கணவர் இறந்த 9 நாளில் பலியான சோகம்

ஆத்தூர் : ஆத்தூர் அருகே, சென்டர் மீடியனில் பைக் மோதி இளம்பெண் உயிரிழந்தார். கணவர் இறந்த 9 நாளில் மனைவியும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன்(30). இவருக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த செல்வராஜ் மகள் ஷாலினி(25), என்பவருக்கும் கடந்த சில வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த 9 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு கணேசன் உயிரிழந்தார்.

இதையடுத்து, சாங்கியம் செய்வதற்காக ஷாலினியை அவரது தாயார் சித்ரா, புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். நேற்று காலை 4 மணிக்கு புதுச்சேரியில் இருந்து ஷாலினி, அவரது சித்தப்பா மகன் சரண்ராஜ்(23), சித்ரா ஆகியோர் ராசிபுரம் நோக்கி டூவீலரில் வந்துள்ளனர்.

ஆத்தூர் அடுத்த காந்திபுரம் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக சரண்ராஜ் ஓட்டி வந்த டூவீலர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதியதில், மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் ஷாலினியில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சரண்ராஜ் பலத்த காயமடைந்தார். சித்ராவுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சரண்ராஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: