கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 1288 கனஅடி ரசாயன நுரையால் விவசாயிகள் கவலை

ஓசூர், ஜூன் 9: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு, நீர்வரத்து தொடர்ந்து 1288 கனஅடியாக நீடிக்கிறது. ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரில் ரசாயன நுரை பொங்கி செல்வதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று கெலவரப்பள்ளி அணையின் நீர்மட்டம் 42.15 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 1228 கனஅடி நீர் வந்த நிலையில், நேற்று காலையும் அதே அளவில் நீடிக்கிறது. அணையில் இருந்து, 1228 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றில் அதிக அளவு செல்லும் நீருடன் குவியல், குவியலாக ரசாயன நுரையும் மிதந்து செல்கிறது.

கெலவரப்பள்ளி அணை பகுதிகளில், ரசாயன நுரைகள் முழுவதுமாக பனி படர்ந்தது போல் காணப்படுகிறது. அங்கு வீசும் காற்றுக்கு ரசாயன நுரை பறந்து, அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் சாலைகளில் விழுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: