திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கத்தில் பிளாஸ்டிக் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் கார்கள் மற்றும் இயந்திரங்கள் உதிரிபாகங்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு தேவையான அட்டைப் பெட்டியை அதற்கேற்ப வடிவமைத்து தயாரிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ பெரும்புதூர் , கோவை ஆகிய பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அட்டைப் பெட்டிகளை தயாரித்து சப்ளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஊழியர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை.

அப்போது குடோனில் அடுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் அட்டை பெட்டிகள் திடீரென் தீப்பற்றி எரிய தொடங்கியது. இது தொடர்பாக காவலாளி கொடுத்த தகவலின் அடிப்படையில் திருவள்ளூர், திருவூர் ஆகிய பகுதியில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இதில் குடோனில் நிறுத்தி வைத்திருந்த பேட்டரி மற்றும் விலையுயர்ந்த 2 கார்களும் எரிந்து நாசமானது. மேலும் தீ விபத்தில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து தொடர்பாக மணவாள நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது நாச வேலையா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: