திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரிப் பருவத்தில் நெல் சாகுபடிப் பரப்பை அதிகரித்து, உணவு தானிய உற்பத்தியை உயர்த்திட குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ளது. வேளாண் துறை மூலம் மாவட்டத்தில் இயந்திர நடவு, நேரடி நெல் விதைப்புக்கான மானியம், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, திரவ உயிரி உரங்கள் விநியோகம், தரமான விதை நெல் விதை விநியோகம், புதிதாக வெளியிடப்பட்ட நெல் விதைக்கான உற்பத்தியை ஊக்குவித்தல் ஆகிய திட்ட இனங்களை செயல்படுத்த 13550 ஏக்கருக்கு ரூ.7.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சொர்ணவாரிப் பருவத்தில் நெல் சாகுபடியை ஊக்குவிக்க நெற்பயிர் இயந்திர நடவு அல்லது நேரடி நெல் விதைப்புக்கான பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு விவசாயி 2 ஏக்கர் வரை மானியம் பெறலாம். உயிரி உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரக்கலவையைப் பயன்படுத்துவதால் மண்வளம் சீர்படுத்தப்பட்டு, பயிரின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.
எனவே, நெல் நுண்ணூட்ட உரக்கலவை 50 சதவீத மானிய விலையில் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ வீதத்தில் ரூ.147.60 என்ற விலையில் வழங்கப்படும். அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை விவசாயிகள் நுண்ணூட்ட உரக்கலவையை மானிய விலையில் பெறமுடியும். மேலும், திரவ உயிரி உரங்கள் ஒரு ஏக்கருக்கு அரை லிட்டர் வீதத்தில் 50 சதவீத மானியத்தில் ரூ.60 மானிய விலையில் வழங்கப்படும். அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை மட்டுமே விவசாயிகள் பெற முடியும்.
அறிவிக்கை செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தரமான சான்று பெற்ற நெல் விதைகள் கிலோ ரூ.10 அல்லது 50 சதவீத மானிய விலையிலும், பத்து ஆண்டுகளுக்குட்பட்ட நெல் விதைகள் கிலோ ரூ.20 அல்லது 50 சதவீத மானிய விலையிலும் வழங்கப்படும். விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை மட்டுமே மானியம் வழங்கப்படும். இதற்காக வேளாண் விரிவாக்க மையங்களில் குறுகிய மற்றும் மத்திய கால சான்று பெற்ற நெல் ரகங்கள் 303 டன் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்வதன் மூலம் முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம். பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டம் பற்றிய விவரங்களைப் பெற தங்களது பகுதி உதவி வேளாண் அலுவலர் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை விவசாயிகள் அணுகி பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் ச.கவிதா தெரிவித்துள்ளார்.
