வேலூர்: வேலூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் வன்னியரசு ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி ஒற்றுமையாக இருந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆகையால், இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு விசிக வேண்டுகோள் விடுக்கிறது.
பெண்களுக்கு, சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக தடுக்க வேண்டும் என்பதற்காக அதிரடிப்படை காவல் அணியை முதல்வர் உருவாக்கி இருக்கிறார். அதேபோல இந்த ஆணவ கொலைகளை தடுப்பதற்கு உரிய கவனம் செலுத்துவார், உரிய நடவடிக்கை எடுப்பார் என நான் நம்புகிறேன். நாடாளுமன்றத்தில் நேரலை ஒளிபரப்புவதுபோல் சட்டமன்றத்திலும் தொடர்ந்து நேரலை செய்ய வேண்டும் என்பதை முதல்வரின் நேரடி கவனத்திற்கு நாங்கள் கொண்டு செல்வோம்.
அண்ணாமலை ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வளர்ந்தவர் என்ற அடையாளம் அவருக்கு உள்ளது. பாஜ தலைவர்களின் வாழ்த்துக்களுடன் புதிய கட்சியை துவங்குகிறார் என்றால் பாஜவின் செயல் திட்டங்களோடு வருகிறார் என்று தான் அர்த்தம். இன்னொரு முகமூடியோடு களத்துக்கு வருகிறார் என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். பாஜவின் அரசியலை வேறு ஒரு வடிவில் கொண்டு வந்தாலும் தமிழக மக்கள் எளிதில் அடையாளம் கண்டு அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
* எடப்பாடிக்குதான் பொறுப்பு
திருமாவளவன் கூறுகையில், ‘‘அதிமுகவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அதன் பொதுச்செயலாளருக்கு உள்ளது என்பதை திராவிட அரசியலின் மீது நம்பிக்கை உள்ளவன் என்கிற அடிப்படையில் சுட்டிக்காட்டி இருக்கிறேன். அதிமுகவின் முன்னணி தலைவர்கள் இதுகுறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்’’ என்றார்.
* நீட்டுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை
‘‘நீட் விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். ஒன்றிய அரசு இதற்கு இணங்கவில்லை. ஆகவே சட்டபூர்வமாக அழுத்தம் தருவதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என்பதை சட்ட வல்லுநர்கள், அரசியல் வல்லுனர்களோடு கலந்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு விசிக வேண்டுகோள் விடுக்கிறது’’ என்று திருமாவளவன் தெரிவித்தார்.
