புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு அறிவிப்பால் ஏற்பட்டுள்ள கடும் மன உளைச்சலால் நாடு முழுவதும் 37 நாட்களில் 12 மாணவர்கள் தற்கொலை செய்துள்ள நிலையில், நாளை பலத்த பாதுகாப்புடன் நீட் மறு தேர்வு நடக்கிறது. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) கடந்த மே 3ம் தேதி நடத்திய இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, மே 12ம் தேதி நடந்த விசாரணையில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டதால், அந்தத் தேர்வை ரத்து செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு வெளியானதிலிருந்து, நாளை (ஜூன் 21) நடைபெறவுள்ள மறுதேர்வு வரை இடைப்பட்ட 37 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவைச் சேர்ந்த 22 வயது தலித் இளைஞர் மற்றும் சீகர் பகுதியைச் சேர்ந்த
பிரதீப் மஹிச் (23) ஆகிய இருவர் தற்கொலை செய்து கொண்டனர். 650 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரதீப், தேர்வு ரத்து செய்தியால் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.
மேலும் டெல்லியைச் சேர்ந்த அன்ஷிகா பாண்டே (20) என்ற மாணவி, மூன்று ஆண்டுகளாக இந்தத் தேர்விற்கு தயாராகி வந்த நிலையில், திடீர் மறுதேர்வு அறிவிப்பால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் உயிரை மாய்த்துக் கொண்டார். இதேபோல் உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியைச் சேர்ந்த ரிதிக் மிஸ்ரா (21) என்பவர், வினாத்தாள் கசிவு கும்பலால் தனது கடின உழைப்பு வீணானதை எண்ணி தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தின் கோயம்புத்தூரைச் சேர்ந்த அனுகீர்த்தனா (19) என்ற மாணவி, மறுதேர்வு குறித்த நம்பிக்கையின்மையால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கார்கில் போர் வீரரின் மகளான ரியா குமாரி தாப்பா (23), பிளஸ் 2 தேர்வில் 96 சதவீதம் மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வுக்கு தயாரான போது மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துள்ளார்.
இந்தத் தற்கொலைகளுக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த மே 3ம் தேதி தேர்வை முடித்த நிம்மதியில் இருந்த மாணவர்கள், மீண்டும் குறுகிய காலத்தில் அதே தீவிரத்துடன் படிக்க முடியாமல் கடுமையான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், சீகர் மற்றும் கோட்டா போன்ற பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து தங்கியிருந்த ஏழை மாணவர்களின் குடும்பங்கள், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. போலீசார் மீட்ட தற்கொலை கடிதங்களில், மாணவர்கள் அனைவரும் அரசின் நிர்வாகத் தோல்வியையும், முறைகேடுகளையும் தங்களின் தோல்வியாக கருதி தங்களை தாங்களே தண்டித்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இந்தத் தேர்வு குளறுபடிகளால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மணிப்பூரின் காங்போக்பி போன்ற பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மாணவர்கள், தேர்வு எழுதுவதற்காக அண்டை மாநிலமான நாகாலாந்தின் கோகிமா போன்ற இடங்களுக்கு பல நாட்களுக்கு முன்னரே சென்று தங்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள நீட் மறுதேர்வுக்காக நாடு முழுவதும் 22.79 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதற்காக இந்தியா மற்றும் 14 வெளிநாட்டு நகரங்கள் உட்பட 551 நகரங்களில் 5,500க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய விமானப்படை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு, முறைகேடுகளைத் தடுக்க 2 லட்சம் அதிகாரிகள் மற்றும் 6,669 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பலத்த சோதனைக்காக தேர்வு நேரம் 180 நிமிடங்களிலிருந்து 195 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தடுக்க ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறை, ஏஐ கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு தற்காலிக தடையும் விதிக்கப்பட்டு, தேர்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பாதுகாப்பு ஒத்திகை;
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 31 தேர்வு மைய நகரங்களில் சுமார் 1.42 லட்சம் பேர் நாளை நடைபெறும் நீட் மறுதேர்வை எழுத உள்ளனர். இந்த தேர்வை எவ்வித முறைகேடுகளும் இன்றி, பாதுகாப்பாக நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மேற்கொண்ட கூட்டு பாதுகாப்பு ஒத்திகை இன்று நடத்தப்பட்டது. வினாத்தாள் கசிவை தடுக்க நாடு முழுவதும் முப்படை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் சரியாக வேலை செய்கிறதா, வினாத்தாள்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்வது எப்படி மற்றும் தேர்வு மைய சோதனைகள் செய்வதற்கான தயார் நிலை ஆகியவற்றை சரிபார்க்கவே இன்று காலை இந்த தீவிர ஒத்திகை நடத்தப்பட்டது.
