திருவாரூர்: முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளி வளாகத்தில் தவெக நிர்வாகி நள்ளிரவில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தை சேர்ந்தவர் அகிலன்(35). தவெக மாவட்ட துணை செயலாளர். இவருக்கு நேற்று பிறந்த நாள். இதையடுத்து அகிலன் தனது கட்சியினருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு அதே பகுதியில் உள்ள இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் சென்று பள்ளி கட்டிடத்தின் முன்புறம் உள்ள காலி இடத்தில் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். இந்த பள்ளியின் கேட் எப்போதும் திறந்தே இருக்கும். இதனால் இவர்கள் பள்ளிக்குள் சென்று பிறந்த நாள் கொண்டாடி உள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரீல்சாகவும், புகைப்படங்களாகவும் சமூக வலைத்தளத்தில் கட்சியினர் பதிவு செய்தனர். இவை தற்போது வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று அகிலன் முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சி எக்கல் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு தனது கட்சியினருடன் சென்று ஆய்வு செய்தார். அங்கிருந்த ஆசிரியர்களிடம் குடிநீர் வசதி, சமையலறை வசதி மற்றும் கட்டிட பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வு வீடியோ மற்றும் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அரசு பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியது மிகப்ெபரிய தவறு. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெகவினரின் இதுபோன்ற கட்டுப்பாடற்ற செயல்களை அக்கட்சி தலைவரும், முதல்வருமான விஜய் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
