ஈரோடு: அமைச்சர் செங்கோட்டையன் உதவியாளர் சபேசன் அராஜகம் செய்து வருவதாக அதிமுக மாவட்ட செயலாளர் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஈரோடு மாவட்டம் கோபி, நம்பியூர், சத்தியமங்கலம் ஆகிய அரசு போக்குவரத்து கழக கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் பிரபுக்கு ஆதரவாக பணியாற்றினர். அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக பணியாற்றினார்கள் என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஈரோடு மண்டலத்தில் இருந்து கோவை, திருப்பூர் மண்டலங்களுக்கு 9 பேரை பணியிட மாற்றம் செய்துள்ளனர்.
இதனை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டு, கோபி போலீஸ் ஸ்டேஷனில் அனுமதி கேட்டு மனு அளித்தோம். போலீசார் அனுமதி தராமல் மறுத்து விட்டனர். தற்போது ஈரோடு எஸ்பி.யிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளோம். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாளரிடத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கோபி கிளையில் பணியாற்றுகிற ஊழியர்களுக்கு பணி மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும் என்றும், இதற்கான பட்டியலை எனது உதவியாளர் சபேசன் உங்களிடத்தில் தருவார். அந்த பட்டியலை பரிசீலித்து உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
அமைச்சர் உதவியாளராக இருக்கிற சபேசன், அனைத்து அரசு சார்ந்த விஷயங்களில் தலையிட்டு வருகிறார். இந்த முறை உதவியாளராக இருக்கிற சபேசன், ஏற்கனவே இருந்த உதவியாளரை விட மிகவும் வேகமாக அனைத்து அரசு விஷயத்திலும் தலையிடுகிறார். வருவாய் துறையில் ஒரு வட்டாட்சியரை மிரட்டியதோடு அவரை சஸ்பெண்ட் செய்யவும் வைத்துள்ளார். அமைச்சரை காட்டிலும், அதிகார துஷ்பிரயோகம் செய்பவராக அவரது உதவியாளர் சபேசன் இருக்கிறார். இவ்வாறு செல்வராஜ் கூறினார்.
