நன்றி குங்குமம் தோழி
“அய்யா… அய்யா…”பின்புறக் குரல் சத்தமாக கேட்க, நிதானமாக தலை திருப்பிப் பார்த்தேன்.“என்ன, மீதிக் காசை வாங்காம போறீங்களே…” பழக்கடைக்காரம்மா சிரித்தார். “ஏதோ பலமான யோசனையில இருக்கீங்க போல…” அவர் நீட்டின பணத்தை வாங்கி, சரி பார்க்கக்கூட இல்லாமல் சட்டைப் பையில் திணித்துக் கொண்டு ஸ்கூட்டருக்கு வந்தேன். உண்மையில் ஏதோ நினைப்புதான். மனசு இயல்பான போக்கில் இல்லை. இலக்கில்லாமல், அமைதி பெறாமல் எங்கெங்கோ அலைபாய்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால், இந்த அம்பது, அறுபது வயதாகப் போகும் கடைசி காலத்தில் எனக்கு வேறென்ன யோசனை இருந்து விடப் போகிறது..? குடும்பக் கவலைகள் தானே..? வாரிசுகள் நன்றாக இருந்தால் அது போதாதா..!சாவி திருகி, ஸ்கூட்டரின் பின்பக்க டிக்கியை திறந்து, பழங்கள் இருந்த பையை அதன் வயிற்றுக்குள் திணித்தேன். சப்போட்டா, மாதுளை, செவ்வாழை என அனைத்துமே இருந்தன. இவையெல்லாமே என் மகள் சரண்யாவுக்குத்தான். பழம் என்றால் அத்தனை பிடிக்கும் அவளுக்கு. ஆனால், அவளின் மகள், என் இரண்டு வயதுப் பேத்தி ஸ்வாதிகா இதைத் தொடவே மாட்டாள். அம்மா இப்படி, மகள் அப்படி. வற்புறுத்தினால், பெயருக்கு எடுத்துக் கொறித்து வைப்பாள். நாம்தான் ஏமாற்றி, ஜூஸ் பிழிந்து வாயில் தள்ள வேண்டும்.
என் தோளில் கை விழுந்தது. திரும்பிப் பார்த்தேன். நமச்சிவாயம் நின்றிருந்தான். என்னை சட்டென உற்சாகம் தொற்றிக் கொண்டது, “நமச்சி நீயா” என்றேன் வியப்புடன். “ஆமாடா நானேதான். அங்கேயிருந்தே கை காட்டிட்டு வர்றேன். என்னை கவனிக்கவே மாட்டேன்றே. என்ன யோசனை அப்படி?” முறைத்தான். சமாளிப்பாக புன்னகைத்தேன். ‘‘ஸாரி பார்க்கலைடா, எப்போ வந்தே ஷீரடி டூரிலிருந்து.?”
“ரெண்டு நாள் ஆச்சு” என்றவன் என்னை உற்றுப் பார்த்தான். என்ன புரிந்ததோ என்னவோ, “சரி வா, ஒரு காபி சாப்பிடுவோம்…” உண்மையில் அந்த நேரத்தில் எனக்கும் அது தேவையாகத்தான் இருந்தது. அருகிலிருந்த ஹோட்டலில் தஞ்சம் புகுந்தோம். ஓரமாக இருந்த சேரில் உட்கார, காத்திருந்த சர்வர் நெருங்கி வந்தார். “காபி மட்டும் போதுமாடா… ரெண்டு காபி நாட்டுச் சர்க்கரை போட்டு” என்றேன் அவரிடம். நகர்ந்தார்.
“சொல்லுடா எப்படியிருந்தது ஆன்மீகச் சுற்றுலா. போன பக்கமெல்லாம் வெயிலா, மழையா, பனியா” என்றேன் அவனிடம் ஆர்வமாக. என்னை உன்னிப்பாகப் பார்த்தான். “அதைவிடு. வழக்கமான உற்சாகம் இல்லையே உன்கிட்டே. வாடி வதங்கிப் போயிருக்கே. என்ன ஏதாவது பிரச்னையா..?” என்றான். நானே எதிர்பார்க்கவில்லை. சட்டென கண்கலங்கி விட்டேன். எதிரில் உட்கார்ந்திருந்தவன் பதறி எழுந்து என் அருகில் வந்து அமர்ந்தான். “என்னடா… என்னாச்சு” என்றான் கைகளை பற்றினபடி.
உண்மையில் எனக்கும் நான் சாய்ந்தழ ஒரு ஆறுதல் தோளோ, உதவிக்கரமோ, நிம்மதி வார்த்தைகளோ தேவைப்பட்டிருக்க வேண்டும் போல. அப்படியெல்லாம் ஒன்றும் பலவீனமானவன் அல்லதான். ஆனால், இத்தனை மன அழுத்தத்திலா இப்போது இருந்திருக்கிறேன். கடவுளே… மனதில் இருப்பதை வார்த்தைகளாகக் கொட்டினேன்… தாள முடியாது.“வயசான காலத்துல நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சது தப்பாடா நமச்சி.
அதுக்குக்கூட நமக்கு கொடுப்பினை இல்லைன்னா என்னடா இது வாழ்க்கை… ப்ச்… சீக்கிரமே போய்ச் சேரலாம் போல இருக்கு” என்றேன் சலிப்போடு. சர்வர் வந்து காபியை வைத்துவிட்டுப் போனார். “பாரு, எப்பேர்ப்பட்ட பிரச்னையா இருந்தாலும் சரி பண்ணிடலாம் என்ன… முதல்ல கண்ணைத் துடை. காபியை எடுத்துக் குடி சொல்றேன்…” ஒரு வாய் அருந்தினேன், கடமைக்கு.
“என்ன, சரண்யா வீட்டுல ஏதாவது சிக்கலா..?”
“அவளுக்கு அவளே தான்டா சிக்கல். இங்கேதான் இருக்கா பத்து நாளா” என்றேன் கவலைக் குரலில்.“அப்படியா..?” “மருமகனுக்கும், இவளுக்கும் இன்னும் ஒத்துப்போக மாட்டேங்குதுடா. கல்யாணமாகி அஞ்சாறு வருசம் ஆச்சு. ரெண்டு வயசுல ஒரு குழந்தையும் இருக்கு. ஆனாலும், இன்னும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்காம என்னவோ பரம எதிரிக மாதிரி சண்டை போட்டுக்கிட்டு இருந்தா என்னடா அர்த்தம்..?”“சரி பண்ணிடலாம் விடு” என்றான் ஆதரவாக. “ஏற்கனவே ஒருதடவை இந்த மாதிரி நடந்திருக்கு இல்ல..?”
“ஆமா, போன வருசம் ஆகஸ்ட்ல. அப்போ ரெண்டு குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் அரும்பாடுபட்டு ஒண்ணு சேர்த்து வெச்சோம். இப்போ திரும்பவும் முறைச்சுக்கிட்டு வந்து நிக்கிறா…”
மெல்லத் தலையாட்டினான். “என்னதான் பிரச்னை? யாரு மேல தப்புன்னு நீ நினைக்கிறே..?”
“எல்லாம் என் மேலத்தான்…” நொந்து போன குரலில் சொன்னேன்.
புரியாமல் பார்த்தான். “ஏன், நீ என்ன பண்ணினே..?”
“எல்லாம் என் வளர்ப்பைத்தான் சொல்றேன். ஒரே மகள்னு ஆரம்பத்திலிருந்தே செல்லம் கொடுத்து, செல்லம் கொடுத்து நிறைய விட்டுத் தந்துட்டேன். சொகுசான வாழ்க்கை, எந்த ரிஸ்க்கும் இல்லை. கஷ்டம் உணரலை, தோல்விகள் கத்துத்தரலை, அணுசரணை சொல்லித் தரலை, தியாகம்னா என்னன்னு தெரியாது. விட்டுக் கொடுக்கறதோட சந்தோஷத்தை புரிஞ்சுக்கலை..! இதெல்லாம்தான் நான் செய்த தவறுகள்!
சரி இத்தனை தவறு செய்தேனே… கல்யாணத்திலயாவது கொஞ்சம் முன்யோசனையோடு சுதாரிச்சிருக்க வேணாம்..? இப்படிப்பட்ட குணமுள்ளவளை போய் அத்தனை பெரிய கூட்டுக் குடும்பத்துல தள்ளிவிட்டேனே… என் புத்தியை என்ன சொல்ல..!”தலையில் அடித்துக் கொண்டேன். நமச்சி என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.
எதுவும் பேசவில்லை. “அவளுக்கு இன்னும் புகுந்த வீடு புரியலை. எல்லா இடமும் அப்பா வீடு போலவே இருக்குமா என்ன..? ஒண்ணு வேணும்னா உடனே கொடுத்திடணும்… தான் கேட்டா நடந்திடணும்… ஆசைப்பட்டா வாங்கித் தந்திடணும்… இப்படியே போனா என்ன அர்த்தம்? எதிர்பார்க்கிறதெல்லாம் நடக்கிறதுக்கு சினிமாவா வாழ்க்கை? எல்லோருக்கும் வெவ்வேற மனசு இருக்கும். வெவ்வேற உணர்வுகள் இருக்கும். பிடிச்சது, பிடிக்காதது, தனித்தனி ரசனைகள் இருக்கும். அது கூட புரியலைன்னா என்ன அர்த்தம்? சொல்லியா கொடுக்க முடியும் இது எல்லாத்தையும்..? இப்படியே விரிசலோட எத்தனை நாள் தாங்கும் இந்த இல்லற வாழ்க்கை..?
இத்தனைக்கும் இவ அந்த வீட்டோட மூத்த மருமக. இவளுக்கும் இளையவ ஒருத்தி இருக்காள்ல. அவ எப்படி நடந்துக்கிறா! எத்தனை பவ்யம், வார்த்தைகள்ல எவ்வளவு மரியாதை. குடும்பத்தோட இணைஞ்சு நல்ல ஒத்துழைப்பு. அவளை எப்படி கொண்டாடறாங்க.
பொறாமைப்பட்டா மட்டும் போதுமா?ஏன்னு யோசிக்க வேணாம்.? காரணம் தெரிஞ்சுக்க வேணாம்..? வந்த ரெண்டே வருஷத்துல எல்லோரும் அவ அன்புல விழுந்திட்டாங்க. இவ இன்னும் பழைய நினைப்புலேயே அங்கே நாட்டாமை பண்ணிட்டிருந்தா யார் மதிப்பாங்க இவளை..?”
சரிதான் என்பது போலப் பார்த்தான். என் உணர்வுகள் புரிந்தவன் போல மெல்ல தலையசைத்தான். சூடு ஆறிப் போயிருந்த காபியை எடுத்து அருந்தி முடித்தேன். “இந்த தடவையும் பைசா பெறாத பிரச்னையைத்தான் தூக்கிட்டு ஓடி வந்திருக்கா. திரும்பப் போக மாட்டேன்னு ஒரே அடம். எத்தனையோ அறிவுரை சொல்லிப் பார்த்தாச்சு. திருந்தினாத் தானே..? கழுதை… அளவுக்கு அதிகமா பாசம் வேற வெச்சுத் தொலைச்சுட்டோம். அடிக்கவும் முடியலை…” கர்சீஃப் எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன்.
“நான் ஒரு யோசனை சொல்லவா… ஏன் நீ ஒரு நல்ல மனநல மருத்துவரை ஆலோசிக்கக் கூடாது..? அவரு ரெண்டு, மூணு கவுன்சிலிங் கொடுத்தா சரண்யா மனசு எளிதா மாறிடுமே..!” எனக்கு ஒருமாதிரியாகி விட்டது. “பைத்தியக்கார டாக்டரையா பார்க்கச் சொல்றே… அவ என்ன மென்டலா..?” “அப்படியில்லை, நம்மை விடவும் அவங்க தெளிவா இந்த மாதிரியான விஷயங்களுக்கு தீர்வு சொல்லுவாங்க. அனுபவஸ்தர்கள், நிறைய கேஸுகளை டீல் பண்ணியிருப்பாங்க. சுலபமா சரிபண்ணிடுவாங்க. சும்மா ஒரு சிட்டிங் நீ மட்டும் போய்ப் பாரு, உனக்கு திருப்தின்னா அப்புறமா சரண்யாவைக் கூட அழைச்சுட்டுப்போ…”மனமில்லாமல் ஒப்புக்குத் தலையாட்டினேன்.
“அட, உடம்பு சரியில்லைன்னா டாக்டர் கிட்ட போறோம்ல… அதுமாதிரிதான் இதுவும். தயங்காதே. நிரந்தர தீர்வு வேணும்னா அவங்க யோசனை, வழிகாட்டுதல் அவசியம் தேவை உனக்கு!” உண்மையில் அவள் நடந்து கொள்வதைப் பார்த்தால் இனி, தான் அங்கே போகவே மாட்டேன் என்பது போலத்தான் இருந்தது. கடவுளே… இன்னும் எத்தனை நீண்ட வாழ்வு மிச்சம் இருக்கிறது. அதற்குள் இப்படி துண்டித்துக் கொண்டு வந்தால் யாருக்குநட்டம்?
மாப்பிள்ளையும் போனில் பேசுகிற போதெல்லாம் பிடி கொடுப்பதில்லை. இவளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார் போல. என் மேல் நல்ல மரியாதை வைத்திருந்தார். இவளால் அதுவும் கெட்டுப் போனது. இதையெல்லாம் எப்படி சீர்படுத்த..? வழி ஒன்றும் புலப்படாத நிலையில், இதன் அடுத்தகட்ட நகர்வு தெரியாத போது நமச்சிவாயம் சொல்வதும் ஒரு வழிதான். “அய்யா வேற..?” என நெருங்கி வந்தார் சர்வர். எழச் சொல்கிறார் என்பது புரிய, மறுப்பாக கையசைத்தேன். பில் வந்தது… எழுந்தோம்.
“நான் நாளைக்கு சாயங்காலமா உன் வீட்டுக்கு வர்றேன், பிரசாதம் எல்லாம் எடுத்துக்கிட்டு. சும்மா சரண்யாகிட்ட மேலோட்டமா பேசிப் பார்ப்போம், அவ என்ன மனநிலையில இருக்கான்னு. அப்புறம் வேணா அடுத்ததைப் பத்தி முடிவெடுத்துக்கலாம்… என்ன சொல்றே..?”“தாராளமா வாடா… கேக்காட்டி என்ன..?”
“வீட்டிலிருந்து கிளம்பறப்போ போன் பண்றேன் சரியா..?” நகர்ந்தான்.நான் வண்டியை திருப்பி வீட்டுக்கு கிளம்பினேன். என்னதான் பிடிக்கவில்லை என்றாலும், துக்கம் தந்தாலும் கடைசியில் வீட்டுக்குப் போகத்தானே வேண்டும், எல்லோரையும் பார்க்கத்தானே வேண்டும்!சரியாக பத்து நிமிடப் பயணம். இரண்டு சிக்னல்கள், போக்குவரத்து மிகுந்த சாலைகளில் எப்படி சரியாக ஓட்டினேனோ… ஏதேதோ நினைவுகளில் தப்பித்து.
வண்டியை வழக்கம் போல காம்பவுன்ட் ஒட்டி நிறுத்தினேன். வாங்கியிருந்த பழங்களை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். டைனிங் டேபிள் மேல் இருந்த கூடையில்
அவைகளை வைத்தேன். சட்டென அந்த வித்தியாசம் தெரிந்தது. முந்திரியும், நெய்யும் இனிப்புடன் கலந்த வாசம். அவசர நடையில் சமையல் அறைக்குப் போக, மனைவி ரேவதி என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு வாணலியில் எதையோ கிண்ட ஆரம்பித்தாள். “ஏய், என்ன பண்ணிட்டிருக்கே?”“ஏன் தெரியலையா உங்களுக்கு” என்றாள் கிண்டலாக. “கே… சரியா..?” என்றேன் அதிர்ச்சியும், வியப்புமாக.
மகள் வந்ததிலிருந்து வீடு பொலிவிழந்து இருண்டு கிடக்கிறது. கவலையில் பொழுதுகளை கழித்தபடி இருக்கிறோம். நான் விரக்தியின் உச்சத்தில் உழன்று கிடக்கிறேன். இவள் என்னடாவெனில்…ஒருவேளை மகாராணி ஆசையாக செய்யச் சொல்லியிருப்பாளோ. செல்லம் கொடுத்து மகள்களை கெடுப்பதில் அம்மாக்களை மிஞ்ச யார் இருக்கிறார்கள்?! “இப்ப எதுக்கு இது?” என்றேன் கோபத்தை அடக்கினபடி. “சொல்லுங்களேன் பார்ப்போம்…” அவள் புன்னகையில் லேசான கிண்டல் இருந்தது. வெறுப்பில் கொதித்த மனதை அடக்கிக் கொண்டு மெளனமாக அவளையே வெறித்தேன்.
“என்ன, புரியலையா? நீங்க மறுபடியும் தாத்தா ஆகப் போறீங்க.”வெட்கம் கலந்த அசட்டுப் புன்னகை அவளிடம். புரியாமல்… என்ன சொல்லுகிறாள் இவள்..? அப்படியானால் ஓ… ஓ… அதுவா. கடவுளே அப்படியா.? நிஜமா இது? விழிகள் விரிய இன்னும் நம்பமுடியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். “மாப்பிள்ளை வீட்டுக்கு தகவல் சொல்லியாச்சு. எல்லோரும் வண்டி பிடிச்சு கிளம்பி வர்றாங்க. உங்களுக்கும் போன்லயே விஷயத்தை சொல்லியிருப்பேன். ஆனா, நேர்ல முகத்தைப் பார்த்து சொல்கிற இன்பம் கிடைக்காதுல்ல?” என்றாள் குறும்புக் குரலில்.
அப்படியானால் இருதரப்பு கோபம், குரோதம், விரோதம், போட்டுக் கொண்ட சண்டைகள், பேசிய யுத்தப் பேச்சுக்கள் எல்லாம் முடிவுக்கு வந்து சமாதானமாகி விட்டார்களா? போர் இல்லாமல் கோபமெல்லாம் கரைந்து சரியாகிவிட்டதா? ஹாலுக்கு வந்து சோஃபாவில் விழுந்தேன். மனம் எதையும் நம்ப முடியாத ஆச்சரியத்தில் தவித்தது. மகளுக்கு அடுத்த குழந்தை என்கிற சந்தோஷ உணர்வு தாண்டியும், அத்தனை பழைய விரிசல்களும் இந்த சந்தோஷத்தில் அடிபட்டுப் போய்விட்ட நிம்மதி மனதை நிறைத்திருந்தது. பெரிய பிரச்னைகள், எதிர்பாராத மாற்று நிகழ்வுகளில் சரியாகி, அனைத்தும் நேராகி, சீராகிவிடும். கடவுளின் இந்த விசித்திரக் கணக்கு புரியாமல் பிரமிப்பில் ஆழ்ந்திருந்தேன்.
தொகுப்பு: நித்யா
