முழுசா லைவ்-னு சொல்லிட்டு இப்போ ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கிறீங்க – தவெக அரசுக்கு கண்டனம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றி, முழுமையாக நேரலை செய்யப்படும் என்று தற்போதைய முதல்வர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியாகவே கொடுத்தார். ஆனால் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது நேரலை திடீரென நிறுத்தப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். சட்டப்பேரவை நேரலையை திடீரென நிறுத்தியதை கண்டித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவை நேரலைத் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தவெக அரசு ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பான எக்ஸ் பதிவில், ‘மாற்றத்திற்கான ஆட்சி’ என்று கூறிவிட்டு, தங்களுக்குச் சாதகமான மற்றும் தேவையான பகுதிகளை மட்டுமே நேரலை செய்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் வாதங்களையோ அல்லது தங்களுக்கு உடன்பாடில்லாத கருத்துகளையோ நேரலை செய்யாமல் தவெக அரசு தவிர்ப்பது ஏமாற்றமளிக்கிறது.

சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் மக்கள் நலன் சார்ந்த கேள்விகளையும், விவாதங்களையும் நேரடியாகக் காணும் உரிமை தமிழக மக்களுக்கு உள்ளது. அதனைத் தடுப்பது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது. எனவே, அரசியல் காரணங்களுக்காக நேரலையைத் துண்டிக்கும் அல்லது தணிக்கை செய்யும் போக்கைக் கைவிட்டு, சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தையும் எவ்விதத் தடையுமின்றி முழுமையாக நேரலை செய்ய வேண்டும் எ தவெக அரசையும், பேரவைத் தலைவரையும் வலியுறுத்தி கேட்டு கொள்வதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: