* திமுகவினரை அடிக்க பாய்ந்து வந்த ராயபுரம் தவெக உறுப்பினர்
கூச்சல் – குழப்பம் ஏற்பட்டதால் பரபரப்பு
சென்னை: சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொளத்தூர் தொகுதி பற்றி பேசியதால் திமுக – தவெக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கூச்சல் – குழப்பம், பரபரப்பு ஏற்பட்டது. திமுக உறுப்பினரை அடிக்க பாய்ந்து வந்த ராயபுரம் தவெக உறுப்பினரால் பேரவையில் பதற்றமான நிலை ஏற்பட்டது. சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாகர்கோவில் ஆஸ்டின் (திமுக) பேசியதாவது: நேற்று முன்தினம் பேரவை நிகழ்வுகள் குறித்து, முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சில விளக்கங்களை குறிப்பிட்டார். சட்டமன்ற மரபு மீறப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
சபையின் மரபு தோற்கடிப்பட்டுள்ளது. இது வரும் காலங்களில் தொடரக்கூடாது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: பேரவையில் எந்த மரபுகளும் மீறப்படவில்லை. தமிழக மக்கள் ஒருபோதும் தேசிய கீதத்தையோ, நாட்டின் ஒருமைப்பாட்டையோ புறக்கணித்தது கிடையாது. அண்ணா, காமராசர், கலைஞர் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்ட நமது தலைவர்கள் வழியில், தமிழக மக்கள் எப்போதும் தேசிய கீதத்திற்கும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் உரிய மரியாதையை அளித்து வந்துள்ளனர். முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, ஆளுநரின் முன்னிலையிலேயே தமிழ்நாட்டின் சுயமரியாதையை காக்க உறுதியுடன் நின்று, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை நிலைநாட்டப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை முந்தைய ஆட்சியின் போதே வந்தது, அதை தற்போதைய அரசு பின்பற்றவில்லை. மாநில சுயாட்சி கொள்கையில் இந்த அரசு எப்போதும் உறுதியாக இருக்கும். ஆஸ்டின்: தமிழகத்தில் சிறுமிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆனாலும் சரி, வானமே இடிந்து விழுந்தாலும் சரி நான் வாயை திறக்கப்போவதில்லை என முதல்வர் வாயை திறக்காமல் சரித்திரப் புரட்சியை படைத்துள்ளார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: எதிர்க்கட்சி உறுப்பினர் அவைக்கு தவறான தகவல்களை அளிக்கிறார்.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் பள்ளி சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணமடைந்தது குறித்து மாலை 7 மணிக்கு புகார் அளிக்கப்பட்டும், 36 மணி நேரமாக காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. அதுகுறித்து முதலமைச்சரோ, அமைச்சர்களோ அல்லது அப்பகுதி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களோ பேசவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கச் சென்றபோது அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். ஆனால், தவெக அரசு பொறுப்பேற்ற இந்த 30 நாட்களில், கடந்த 30 ஆண்டுகால சாதனைகளுக்கு இணையான பணிகளை முதல்வர் விஜய் 24 மணி நேரமும் செய்து வருகிறார்.
முதல்வருக்கு எப்போது பேசவேண்டும் என்பது தெரியும். எங்களுக்கும் பேச தெரியும், எப்போது பேச வேண்டும் என்பது இங்கு இருக்கும் அனைவருக்கும் பேச தெரியும். கொளத்தூரில் எங்கள் முதல்வர் 5 நிமிடங்கள் பேசியதற்கு என்ன ரிசல்ட் வந்தது என எல்லாருக்கும் தெரியும். திமுக உறுப்பினர் (சிவசங்கர்): முதல்வர் விஜய் பற்றி பேசினால், கொளத்தூரை பற்றி பேசாதீர்கள். சம்பந்தப்பட்ட உறுப்பினர் பற்றி பேச வேண்டும். (இதனால் பேரவையில் தவெக மற்றும் திமுகவினர் இடையே சிறிது நேரம் அமளி ஏற்பட்டது. தவெக தரப்பில் ஏய்… ஏய் என திமுக உறுப்பினர் சிவசங்கரை பார்த்து ஒருமையில் பேசினர்.
தவெக தரப்பில் இருந்து ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு கடைசி வரிசையில் இருந்து எழுந்து திமுகவினரை அடிக்க பாய்வது போல கைகளை ஓங்கிக்கொண்டு ஆவேசமாக முன் வரிசையை நோக்கி நகர்ந்து வந்தார். பிறகு அவரை தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர். இதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று இன்னும் ஆவேசமாக கத்தி பதிலடி கொடுத்தனர். இதனையடுத்து திமுகவினர் என்ன செய்தாலும் அதற்கு அமைதியாக இருக்க மாட்டோம். அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுப்போம் என தவெக எம்.எல்.ஏ.,க்களும் உரத்த குரலில் பேசினர். இதனால் மீண்டும் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இவ்வளவு பிரச்னை நடந்தபோதும், முதல்வர் விஜய் எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்தார்)
சபாநாயகர்: உறுப்பினர்கள் அனைவரும் அவையின் கண்ணியத்தை காக்கும் வகையில், தனிநபர் குற்றச்சாட்டுகளை தவிர்த்து, மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகளை மட்டுமே பேச வேண்டும். அமைச்சர் ராஜ்மோகன்: பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் சட்டமன்றத்தில் பேசுவது முறையா? ஏய்… என ஒருமையில் பேசியவர்கள் தலைவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருக்கிறோம். அனைத்து கட்சியினரும் அவை மரபை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
இந்தியாவிலேயே ஆபத்தான மாநிலம் தமிழ்நாடுதான் என்று மாறும் நிலை?.. திமுக பகிரங்க குற்றச்சாட்டு
ஆஸ்டின் (திமுக): திமுக ஆட்சியில் இருந்தவரை தமிழ்நாட்டிலே சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணி பாதுகாக்கப்பட்டது. ஆனால், தவெக ஆட்சி அமைந்த ஒரே மாதத்திலே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு அடியோடு சிதைந்து போயிருக்கின்றது. இன்றைக்கு குற்றவாளிகள் முழு சுதந்திரத்தோடு குற்றச்செயலில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், நான்கு சாதிய ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், இந்தியாவிலேயே அமைதியான மாநிலம் தமிழ்நாடுதான் என்று இருந்த நிலை மாறி, இந்தியாவிலேயே ஆபத்தான மாநிலம் தமிழ்நாடுதான் என்ற நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கின்றது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்: ஜூன் மாதம் 3ம் தேதி தொடங்கி, 16ம் தேதிக்குள் 473 போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 672 போதைப்பொருள் ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது இடங்களில் 1,418 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, நேரில் சென்று 69 வழக்குகள் பதிவு செய்து விசாரித்து, ஆதரவு சேவைகளுக்காக 25 வழக்குகளுக்கு அனுப்பப்பட்டு, காணாமல் போன ஒரு குழந்தையும், பெண்ணையும் சிங்கப்பெண்கள் சிறப்பு படை கண்டுபிடித்து வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, கடந்த 15, 20 நாட்களுக்குள்ளாக 1,328 குற்றவாளிகள் எல்லாம் அடையாளம் காணப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
