போச்சம்பள்ளி : ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து, போச்சம்பள்ளியில் பட்டியில் அடைத்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் வியாபாரம் அமோகமாக நடக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்போது ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, வியாபாரிகள் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆடுகளை வாங்கி வந்து விற்பனை செய்யத்துவங்கி உள்ளனர்.
அதே போல், மகாராஷ்ரா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மொத்தமாக வெள்ளாடுகளை வாங்கி லாரி மூலம் கொண்டு வந்து, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பட்டி அமைத்து பராமரித்து வருகிறார்கள்.
தற்போது, மாவட்டத்தில் பரவலாக கிராமங்களில் உள்ளூர் பண்டிகை நடைபெற்று வருகிறது. கிராம மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கறி விருந்து வழங்க, மகாராஷ்டிரா மாநில வியாபாரிகளிடம் ஆடுகளை வாங்கிச் செல்கிறார்கள்.
கிராம மக்கள் 5 முதல் 10 ஆடுகள் என குழுவாக வாங்கி, வாகனங்களில் கொண்டு செல்கிறார்கள். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் ஆடுகளுக்கு தேவை அதிகரித்துள்ளதால், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநில வியாபாரிகள், ஆடுகளை மொத்தமாக வாங்கி வந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டியில் அடைத்து வைத்து விற்பனை செய்கிறார்கள்.
இந்த ஆடுகளின் விலை குறைவாக உள்ளதால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இங்கு ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது. மாவட்டத்தில் திருவிழாக்கள் நடந்து வருவதால் ஆடுகள் விற்பனை அமோகமாக உள்ளது. எங்களுக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது,’ என்றனர்.
