இரண்டு மாதத்தில் ஓய்வு பெறவுள்ள தலைமை செயலர் சாய்குமார் பதவிக்காலத்தை நீட்டிக்க ஒன்றிய அரசுக்கு தவெக அரசு கடிதம்

சென்னை: இரண்டு மாதத்தில் பணிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் தற்போதைய தலைமைச்செயலாளர் சாய்குமார் பதவிக்காலத்தை நீட்டிக்க கோரி ஒன்றிய அரசுக்கு தவெக அரசு கடிதம் எழுதியுள்ளது பல சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை, பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வை பாதிக்கும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சாய்குமார், மதுரை, தர்மபுரி, விருதுநகர் மாவட்டம் உள்பட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவர், நகராட்சி நிர்வாக ஆணையர், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை பல ஆண்டுகளாக வகித்துள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரின் முதன்மைச் செயலாளர் – 1 ஆகவும் பணியில் இருந்தவர். இந்நிலையில், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது, கடந்த ஏப்ரல் 8ம் தேதி தேர்தல் ஆணையம் அப்போதைய தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை மாற்றிவிட்டு சாய்குமாரை தலைமைச் செயலாளராக நியமித்தது.

பொதுவாக தேர்தலுக்கு பின்னர் வரும் அரசுகள் தாங்கள் விரும்பும் அதிகாரியை தலைமை செயலாளராக நியமித்து கொள்வது இயல்பு. ஆனால் தேர்தலுக்கு பின்பு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பின்பு கடந்த அரசில் பதவி வகித்த ஜூனியர் முதல் சீனியர்கள் வரையிலான பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தது. புதிய டி.ஜி.பி-யும் நியமிக்கப்பட்டார். ஆனால் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைமைச் செயலாளரான சாய்குமாரை மட்டும் மாற்றம் செய்யவில்லை. வழக்கமாக ஒரு புதிய அரசு அமையும்போது முதலில் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்ட பின்புதான், பிற அதிகாரிகளின் மாற்றங்களை தலைமைச் செயலாளரை வைத்து அரசு மேற்கொள்ளும். ஆனால் தவெக அரசு அமைந்த பின்பு இந்த நடைமுறை அடியோடு மாறி உள்ளது.

இந்த சூழலில், தலைமைச் செயலாளர் சாய்குமார் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க கோரி, விஜய் தலைமையிலான தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. தலைமைச் செயலாளர் பதவிக்கு வேறு பல மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வரிசையில் உள்ள நிலையில், ஓய்வு பெறுவதற்கு ஏறக்குறைய இரண்டரை மாதங்களுக்கு முன்பாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சாய்குமாரை பதவி நீட்டிப்பு செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டால் பணி ஓய்விற்கு பின் 3 மாதங்கள் முதலில் நீட்டிப்பு செய்யப்படுவார். அதன்பின் மேலும் பதவி நீட்டிப்பு வழங்கப்படும்.

வழக்கமாக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பணி நீட்டிப்பு வழங்கும் முடிவினை, அந்தக் குறிப்பிட்ட அதிகாரி ஓய்வு பெறும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்னதாக மாநில அரசு எடுக்கும். ஆனால் சாய்குமார் ஓய்வு பெற இன்னும் இரண்டரை மாதங்கள் உள்ள நிலையில், அதற்கான தேவை இப்போதே ஏன் எழுந்தது என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் உள்ள நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் சாய்குமாருக்கு பணி நீட்டிப்பு வழங்க அரசு கோரிக்கை வைப்பதில் சந்தேகம் உள்ளது என தலைமை செயலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.இந்த பதவி நீட்டிப்பு வழங்குவதன் மூலம் பல்வேறு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் தலைமைச் செயலாளர் ஆக விருப்புகிறவர்களின் கனவு முற்றிலும் பாதிக்கப்படும் என்கின்றனர் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்.

ஒன்றிய பாஜவுடன் சமரசம்;
தற்போதைய தலைமைச் செயலாளர் சாய்குமார், நேர்மையான அதிகாரிதான். ஆனால் அவருக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளின் பதவி உயர்வு பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், முதல்வர் விஜய், ஒன்றிய பாஜக அரசுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளார். இதனால் சாய்குமார் தொடர்ந்து தலைமைச் செயலாளராக இருந்தால், தமிழக அரசுக்கும், பாஜவுக்கும் பாலமாக இருப்பார். பிரச்னை இல்லாமல் ஒன்றிய அரசுடன் சுமூகமான உறவுடன் பயணிக்கலாம் என்று கருதுவதாக கூறப்படுகிறது. இதனால் பதவி நீட்டிப்பு வழங்க அவர் முடிவு செய்து ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories: