பெரம்பலூர் அருகே டீசல் டேங்கர் லாரியில் திடீர் தீ விபத்து

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டீசல் டேங்கர் லாரி தீடிரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜியோ குழுமத்திற்கு சொந்தமான டேங்கர் லாரி ஒன்று சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், 24 டன் டீசல் ஏற்றிச் சென்ற அந்த டேங்கர் லாரி, டயர் வெடித்ததால் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து, உடனே சுதாரித்த ஓட்டுநர் அருண்முருகன், லாரியை விட்டு கீழே இறங்கியுள்ளார். தொடர்ந்து, புகை அதிகமாகி, தீப்பற்றி எரிய தொடங்கியது.

லாரியில் இருந்த தீயணைப்பு உபகரணங்களை கொண்டு தீயை அணைக்க முயன்றுள்ளார். ஆனால் தீ கட்டுக்குள் வராததை அடுத்து உடனே லாரி ஓட்டுநர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து விரைந்து வந்த பெரம்பலூர் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் டிரைவர் மற்றும் கிளீனர் உயிர் தப்பிய நிலையில், லாரி பெருமளவில் சேதமடைந்தது. டேங்கர் லாரி முழுவதும் டீசல் இருந்த நிலையில் துரிதமாக செயல்பட்டு தீ அணைக்கப்பட்டதால் பெரும் அளவிலான தீவிபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மங்கலமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: