சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய், தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதனை கட்சி பேதமின்றி தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தும், வரவேற்பு தெரிவித்தும் பேசினர். காவரி ஆணையத் தீர்ப்புக்கு எதிராக செயல்படக் கூடாது என்று காங்கிரஸ் தலைமை கர்நாடக முதலமைச்சருக்கு அறிவுறுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா குறிப்பிட்டார்.
தீர்மானத்தை ஆதரித்து பேசிய தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டு மக்களின் உரிமையை அண்டை மாநிலங்களிடம் சென்று கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. எனவே மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக நிரந்தர தீர்வு தேவை என்று வலியுறுத்தி உள்ளார். மேகதாது விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றாகவே இருக்கும். மாநில உரிமைகளுக்காக மறைந்த தலைவர் கலைஞர் மற்றும் கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த ஸ்டாலின் பல்வேறு சட்டப்போராட்டங்கள் மற்றும் தீர்மானங்களை கொண்டு வந்துள்ளார் என்று நினைவு கூர்ந்தார்.
இதனிடையே மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து பேசிய பாமக எம்.எல்.ஏ. செளமியா அன்புமணி, காவிரியின் 800 கி.மீ நீளத்தில், 320 கி.மீ நீளம் மட்டுமே கர்நாடகாவில் உள்ளது. அப்படி பார்த்தால் காவிரியில் தமிழக்த்திற்கு தான் உரிமை அதிகம். கடைமடை மாநிலத்தின் அனுமதி இல்லாமல் எந்த அணையும் கட்டக் கூடாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. ஒருவேளை மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான நதிநீர்ப் பகிர்வு வெகுவாக குறையும் அபாயம் இருக்கிறது என குறிப்பிட்டார்.
