×

நீர் ஆதாரம் நம் முக்கியமான அடிப்படை பிரச்சனை; மேகதாதுவில் அணை கட்டுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது – தனித்தீர்மானம் கொண்டு வந்த முதல்வர்

சென்னை: தமிழக சட்டமன்றம் இன்று கூடி இருக்கும் நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எந்த வித அனுமதியுன் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். நமது விவசாயிகளுக்காகவும், மக்களுக்காகவும் நிற்பது நமது கடமை, கட்சி பாகுபாடின்றி ஒருமித்த கருத்தோடு இந்த தீர்மானத்தை அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும் முதல்வர் விஜய் கேட்டு கொண்டார்.

தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்த அனுமதியையும் ஒன்றிய அரசு தர கூடாது என வலியுறுத்தினார். “காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சி செய்வதை ஏற்க முடியாது என்று முதல்வர் கூறினார்.

காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதால், காவிரிப்படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது. காவிரிப் பிரச்சினை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையாகும்.

ஆதலால், கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது. கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டு கொண்டுள்ளார். மேகதாது அணைக்கு எதிராக முதல்வர் விஜய் முன்மொழிந்துள்ள தீர்மானத்திற்கு காங்கிரஸ், மஜக, விசிக,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி வரவேற்பு தெரிவித்து உள்ளன.

“மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. இது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல்” என மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தனித்தீர்மானத்தை ஆதரித்து காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் பேசினார்.

Tags : Megadatu ,Chennai ,Tamil Nadu Assembly ,Karnataka government ,Kaviri River ,EU government ,
× RELATED காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும்...