×

உ.பி.யில் பயங்கரம்: டிராக்டர் மீது இ-ரிக்‌ஷா மோதல்: 6 பெண்கள் பரிதாப பலி

 

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம், கர்ஹவுனா என்ற கிராமத்தில் திருமணத்துக்கு முந்தைய சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக 9 பெண்கள் நேற்று இ-ரிக்‌ஷாவில் புறப்பட்டனர். வழியில் முன்னால் சென்ற ஒரு டிராக்டர் மீது மோதாமல் தவிர்க்க இ-ரிக்‌ஷா ஓட்டுநர் முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக, எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு டிராக்டர் மீது இ-ரிக்‌ஷா மோதியது. இதில் இ-ரிக்‌ஷாவில் பயணம் செய்த 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பெண்கள், இ-ரிக்‌ஷா ஓட்டுநர் காயமடைந்தனர்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த 3 பேரை மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 டிராக்டர்களின் ஓட்டுநர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலக ‘எக்ஸ்’ தளத்தில், “உ.பி.யில் நிகழ்ந்த விபத்தில் உயிர்கள் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என பதிவிடப்பட்டுள்ளது. ேமலும் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags : U. B. ,Lucknow ,e ,Riksha ,Karhawana, Badaun district, Uttar Pradesh ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தின் பெயரை...