பாலக்காடு, ஜூன் 18: இரிஞ்ஞாலக்குடா அருகே மின்வாரிய ஊழியர் மின்கம்பத்தில் பழுது பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் இரிஞ்ஞாலக்குடா மேஜர் செக்ஷன் மின்வாரிய அலுவலகத்தில் மின் ஊழியராக ஆறாட்டுப்புழாவைச் சேர்ந்த மனோஜ் (46) என்பவர் பணிபுரிந்தார். இவருக்கு ரதி என்ற மனைவியும், பிளஸ்-1 படிக்கிற பூஜா என்ற மகளும், 4வது வகுப்பு படிக்கும் அர்ஜூன் என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரிஞ்ஞாலக்குடா அருகே மாபிரணம் சந்திப்பில் மின் கம்பத்தில் பராமரிப்பு பணியில் மனோஜ் உட்பட சக ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
திடீரென மின் கம்பத்தில் இருந்த மனோஜை மின்சாரம் தாக்கியது. இதில், மனோஜ் தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தப்பின் மேல் சிகிச்சைக்காக திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இரிஞ்ஞாலக்குடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
