நத்தம், ஜூன் 19: நத்தம் அருகே மாங்காய் ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து ஒருவர் படுகாயமடைந்தார்.
நத்தம் அருகே கோபால்பட்டி – பூவக்கிழவன்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன் (48). இவர் மாங்காய்களை வேனில் ஏற்றிக்கொண்டு நத்தத்திலிருந்து புறப்பட்டு திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இவருடன் வேனில் லோகநாதன் என்பவரும் சென்று கொண்டிருந்தார். துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கும்பச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனிலிருந்த மாங்காய்கள் சாலையில் கொட்டிய நிலையில், வேனில் வந்த லோகநாதன் காயமடைந்தார்.
உடன் அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
