சென்னை: நீட் தேர்வை நேர்மையாக, வெளிப்படையாக நடத்தும் வகையில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 3ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தேர்வுக்கு முன்பு வினாத்தாள் கசிந்ததால் தேர்வை ரத்து செய்து என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமை மே 12ம் தேதி உத்தரவிட்டது. மேலும், ஜூன் 21ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்தது.
நீட் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பாக 15 பேர் வரை கைது செய்யப்பட்டனர். நீட் மறுதேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஜூன் 22ம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில், நீட் தேர்வை நியாயமாகவும், வெளிப்படை தன்மையுடனும் நடத்துவதை உறுதி செய்ய விரிவான, நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி வெங்கடேஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், நீட் தேர்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்குமாறு உச்ச நீதிமன்றம், 2024ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. தற்போது நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உத்தரவிடப்பட்டு, விசாரணை ஜூலை மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
