குன்றத்தூர் அருகே பரபரப்பு; உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் நடிகர் சரவணன் காரணம்: முதல் மனைவி புகார்

சென்னை: `எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் நடிகர் சரவணன் தான் காரணம்’ என்று அவரது முதல் மனைவி அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவில் 1990ம் ஆண்டு கால கட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரவணன். இவர், வைதேகி வந்தாச்சு, பொண்டாட்டி ராஜ்ஜியம், அபிராமி சரவணன், மாமியார் வீடு, அரவிந்த், சூரியன் சந்திரன், மருது, நல்லதே நடக்கும் ஆகிய படங்களில் கதா நாயகனாக நடித்து புகழ் பெற்றார். பின்னர், 2007ம் ஆண்டு வெளியான `பருத்திவீரன்’ திரைப்படம் மூலம் துணை நடிகரானார். தொடர்ந்து கோலமாவு கோகிலா, அரண்மனை, ஜெயிலர் போன்ற வெற்றி பெற்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இவர், கடந்த 2003ல் சூர்யஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் குழந்தை இல்லை. இந்நிலையில், கடந்த 2019ல் ஸ்ரீதேவி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மற்றும் 2வது மனைவியுடன் மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் முதல் மனைவி தனியாகவும், 2வது மனைவியுடன் சரவணனும் வசித்து வந்தனர். முதல் மனைவி சூர்யஸ்ரீயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரே அடுக்குமாடி குடியிருப்பில், எதிர் எதிர் வீட்டில் வசித்து வந்தபோதும் பேசிக் கொள்ளதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கணவர் சரவணன், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தகாத வார்த்தைகளால் ஆபாசமாக திட்டுவதாகக் கூறி அண்மையில் ஆவடி காவல் ஆணையரகத்தில் சூரியஸ்ரீ புகார் அளித்து இருந்தார்.

அதேபோல், தனக்கு உணவு கூட போடுவதில்லை என்றும் நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் வழக்கும் தொடர்ந்திருந்தார். அதன் அடிப்படையில், மனைவி சூர்யஸ்ரீக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கடந்த 2ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சூர்யஸ்ரீ தங்கிருந்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை நடிகர் சரவணன், கடந்த சில தினங்களுக்கு முன் ஆள் வைத்து அகற்றினார். இதனால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, போரூர் அடுத்த மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.

அதில், ஏற்கனவே பல்வேறு தாக்குதல்கள் தன் மீது நடந்துள்ள நிலையில், தற்போது சிசிடிவி கேமராவும் அகற்றப்பட்டு இருப்பது, தனக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தனக்கும், தனது உடமைக்கும் எது நேர்ந்தாலும் அதற்கு நடிகர் சரவணன் தான் முழு காரணம். முதல் மனைவியிடம் சட்டப்படி முறையாக விவாகரத்து பெறாமல், என்னை தனியாக தவிக்க விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்தது குறித்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் சூர்யஸ்ரீ கூறினார்.

அவரது புகாரின் அடிப்படையில் போலீசார், தொடர்ந்து இரு தரப்பிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சரவணன் மீது அவரது மனைவியே காவல் நிலையத்தில் புகார் செய்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: