மதுரை, ஜூன் 18: திருப்பரங்குன்றம் கோயில் பகுதியில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குமார், இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தார். கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார். இப்பகுதியில் ரூ.3.16 கோடியில் கட்டப்படும் தாலுகா அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவனியாபுரம் வெள்ளைக்கல்லில் உள்ள காப்பகத்தில் நாய்கள் பராமரிப்பு, கருத்தடை பணிகள் குறித்தும், அப்பகுதியில் பயோ கேஸ் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும் பார்வையிட்டார். கமிஷனருடன் அதிகாரிகள் உடன் சென்றனர்.
