தஞ்சாவூர், ஜூன் 18: தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் ரூ.2½ கோடி செலவில் ‘ப’ வடிவத்தில் சாலை அமைக்கப்பட்டு புனரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 3 இடங்களில் கார், ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றி, இறக்கும் வகையில் நிழற்குடை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் 8வது உலகத்தமிழ் மாநாடு 1995ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது, தஞ்சையில் மேம்பாலங்கள், மணிமண்டபம், கோபுரங்கள், வரவேற்பு தூண்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. மேலும், பல்வேறு வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் தஞ்சை புதிய பஸ் நிலையமும் கட்டப்பட்டது. இங்கிருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, திருச்சி, சென்னை, பெங்களூரு, வேளாங்கண்ணி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
