பிரதமர் மோடியிடம் அதிபர் டிரம்ப் வாக்குறுதி; இந்தியா தாக்கப்பட்டால் உதவ அமெரிக்கா வரும்: ஜி7 மாநாட்டின் இடையே சந்திப்பு

எவியன்: ஜி7 உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான இருதரப்பு சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது, அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பிற்கான அம்சங்கம் இடம் பெற வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியாவை யாராவது தாக்கினால் உதவிக்கு அமெரிக்கா உடனடியாக வரும் என அதிபர் டிரம்ப் உறுதி அளித்தார்.

பிரான்சின் எவியன் லெஸ் பெய்ன்ஸ் நகரில் ஜி7 உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு ஆலோசனை நடத்தினார். அதன்படி, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான சந்திப்பு நேற்று நடந்தது. கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்த பிரதமர் மோடி சுமார் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சந்தித்தார். மேற்கு ஆசியா போருக்குப் பிறகு மோடி-டிரம்ப் இடையே நடக்கும் முதல் சந்திப்பு என்பதால் இது மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சந்திப்பில், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், இருதரப்பு பாதுகாப்பு, ராணுவ உறவுகள் மற்றும் மேற்கு ஆசிய நெருக்கடி ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட்டன. சமீபத்தில் ஓமன் அருகே அமெரிக்க ராணுவ தாக்குதலில் வணிக கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் முற்றுகையால் வணிக கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலையில் இவ்விவகாரத்தை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி கூறுகையில், ‘‘கடல் வழிப் போக்குவரத்திற்கான சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம். கடல்சார் வர்த்தகத் துறையில், உலகின் பல்வேறு கடற்பகுதிகளிலும் லட்சக்கணக்கான இந்திய மாலுமிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பும் அதே அளவு முக்கியமானது என்று நான் கருதுகிறேன். எனவே, ஈரானுடனான ஒப்பந்தத்தில் மாலுமிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் மற்றும் அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’’ என வலியுறுத்தினார்.

மேலும் மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு தலைமையேற்றுச் செயல்பட்டதற்காக அதிபர் டிரம்பை மோடி பாராட்டினார். அதே போல, பிரதமர் மோடியையும் அதிபர் டிரம்ப் வெகுவாக பாராட்டினார். ஹார்முஸ் நீரிணையை திறந்த நிலையில் வைத்திருப்பது உலகப் பொருளாதாரத்திற்கு மிக அவசியமானது என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், ‘‘பிரதமர் மோடி உடனான சந்திப்பு மிகச்சிறப்பாக அமைந்தது. நான் அதிபராக இருக்கும் வரை, இந்தியாவுக்கு வெள்ளை மாளிகையில் ஒரு சிறந்த நண்பர் இருப்பார். அங்குள்ள அனைவரும் இந்தியாவை நேசிக்கிறார்கள். பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். எங்களின் இருதரப்பு பாதுகாப்பு உறவு, ஒரு மிகச்சிறந்த உறவு என்று நான் கருதுகிறேன்.

இந்தியா தாக்கப்பட்டால், அவர்களுக்கு உதவ நாங்கள் அங்கு இருப்போம். நாங்கள் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறோம். பிரதமர் மோடி அமெரிக்காவில் பல முதலீடுகளைச் செய்து வருகிறார். அந்த நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம். அவர் நீண்ட காலமாக எனது நண்பராக இருந்து வருகிறார், எங்களுக்குள் எப்போதும் சிறந்த உறவு இருந்து வருகிறது. பிரதமர் மோடி தலைவராக இருக்கும் வரை, மேற்கு ஆசியா உள்ளிட்ட அனைத்து விவகாரத்திலும் இந்தியா பெரிய பங்கை வகிக்கிறது என்று நான் நினைக்கிறேன்’’ என்றார்.

எதிராளியை வீழ்த்துபவர் வர்த்தகத்தில் உறுதியானவர்
இருதரப்பு சந்திப்புக்கு முன்பாக, ஜி7 தலைவர்கள் பங்கேற்ற மதிய விருந்தில் அனைத்து தலைவர்கள் மத்தியில் பேசிய அதிபர் டிரம்ப், ‘‘அமைதியாகவும் நிதானமாகவும் எதிராளியை வீழ்த்துபவராக செயல்படும் மிக திறமைசாலி பிரதமர் மோடியை போல நான் இல்லை; அவரைப் பாருங்கள்’’ என புகழ்ந்து பேசினார். பின்னர், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முன்னேற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், ‘‘மோடி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நல்லவராக தெரிகிறார். தேவதூதரைப் போல இருக்கிறார். ஆனால் உண்மையில் அவர் மிகவும் கடுமையானவர். எதிராளியை வீழ்த்தக்கூடிய வல்லவர். வர்த்தகத்தில் மிகவும் உறுதியானவர். மிகக் கடுமையாக பேரம் பேசக் கூடியவர்’’ என்றார். மேலும், விரைவில் இந்தியாவுக்கு வர இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம்
ஜி7 உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் மோடி நேற்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்தித்து பேசினார். பிரதமர் மோடி உடனான சந்திப்பை தொடர்ந்து ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான்டெர் லேயன் எக்ஸ் தளத்தில், ‘‘வர்த்தக ஒப்பந்தங்களிலேயே மிக முக்கியமான ஒன்றை நாங்கள் இறுதி செய்துள்ள நிலையில், எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற விரைவாக செயல்பட்டு வருகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்’’ என பதிவிட்டுள்ளார்.

3 மாலுமிகள் இறப்புக்கு கவலை தெரிவித்த டிரம்ப்
ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், ‘‘அது குறித்து நான் கேள்விப்பட்டேன். இது ஒரு கடினமான பணி. இதற்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். இத்தகைய சம்பவங்கள் நீண்ட காலமாகவே நிகழ்ந்து வருகின்றன. இருப்பினும் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம்’’ என கவலையுடன் கூறினார்.

Related Stories: