நான் இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை: ஜி7 உச்சி மாநாட்டில் ட்ரம்ப் பேச்சு

இவியான்: ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. நான் இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை என டிரம்ப் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இவியான் நகரில் ஜி7 உச்சி மாநாட்டின் போது, கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமது அல்-தானியுடன் டிரம்ப் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பிற்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைய வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

மேலும் மத்திய கிழக்கு நிலவரம் குறித்தும் டிரம்ப் கருத்து வெளியிட்டார். குறிப்பாக லெபனான் தொடர்பான சமீபத்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், சில தாக்குதல்களை தாம் விரும்பவில்லை என்று தெரிவித்தார். அதே நேரத்தில் , ஈரானை மையமாகக் கொண்ட பிராந்திய பதற்றம் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை. நான் இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை. ஏனெனில் நான் செய்த விஷயங்களை துணிச்சலாக செய்ய கூடிய வேறு ஜனாதிபதி இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும் நெதன்யாகுவுடனான உறவு சிறந்த முறையில் உள்ளது.

ஆனால், லெபனான் விவகாரத்தில் அதிக பொறுப்புடன் அவர் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.இதேபோன்று கத்தார் மன்னர் டிரம்ப்பிடம் கூறும்போது, மத்திய கிழக்கில் முக்கிய தருணத்தில் உங்களுடைய தலைமைக்காக நான் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். எங்களிடம் நண்பர்கள் உதவி கேட்டால், நாங்கள் உதவி செய்யவே எப்போதும் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Related Stories: