×

இதுவரை 8 தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது செங்கோட்டையன், லீமா ரோஸ் வெற்றியை எதிர்த்து மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில், தமிழக அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேபோல், லால்குடி தொகுதியில் வெற்றி பெற்ற லீமா ரோஸ் வெற்றியை எதிர்த்தும் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் நல்லசிவத்தை விட 16,620 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து, கோபிசெட்டிப்பாளையம் அதிமுக வேட்பாளர் பிரபு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், வேட்புமனுவில் சொத்து, குற்ற வழக்கு விவரங்கள் தெரிவிக்கும் பிரமாண பத்திரத்தில் தகவல்களை சான்றளித்து கையெழுத்திட்டுள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகி விட்டது. அதனால், அந்த வேட்புமனுவை ஏற்றது முறையற்றது. எனவே, செங்கோட்டையன் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல, லால்குடி தொகுதியில், தவெக வேட்பாளரை விட 2,739 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோசின் வெற்றியை எதிர்த்து, தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பாரிவள்ளல் சார்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஏழு நிறுவனங்களில் தனக்குள்ள பங்குகள் குறித்த விவரங்களை லீமா ரோஸ் மறைத்துள்ளார். அதிமுக துண்டு அணிந்து கொண்டு தேவாலயங்களில் பிரசாரம் செய்துள்ளார். இதேபோல, புதுக்கோட்டை தொகுதியில் 1,867 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ. முத்துராஜாவின் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் ஷெரீப் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதுவரை 8 தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Sengkottiaan ,Lema Rose ,Chennai ,Supreme Candidate ,Prabhu ,Chennai High Court ,Tamil ,Nadu ,Minister ,Sengkottiyan ,Kobisetipalayam ,Lima Rose ,Lalgudi ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது!!