தவெகவுக்கு தாவுகிறாரா செல்லூர் ராஜூ

 

மதுரை: அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ மதுரையின் மேற்கு தொகுதி எம்எல்ஏவாக மூன்று முறை வென்றவர். கடந்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் எந்நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. மதுரையின் பிற மாவட்டச் செயலாளர்களான உதயகுமார், ராஜன்செல்லப்பா ஆகியோர் கட்சி நிகழ்ச்சிகளில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் உதயகுமார் தினம் ஒரு வீடியோ அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

அதேசமயம், கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமலும், தற்போதைய பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் குறித்து எந்த ஒரு கருத்தும் வெளியிடாமலும் செல்லூர் ராஜூ ஒதுங்கி இருந்ததால், அதிமுக மாஜி அமைச்சர்கள் வரிசையில் செல்லூர் ராஜூவும் அதிமுகவில் இருந்து விலகி, தவெக கட்சிக்கு செல்ல இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் பரவின. அவர் தரப்பிலும் இதுதொடர்பாக எந்த மறுப்பும் வெளியிடப்படவில்லை. இந்த சூழலில் நீண்ட நாட்களுக்கு பிறகு மதுரை கட்சி அலுவலகத்திற்கு செல்லூர் ராஜூ நேற்று வந்தார்.

அவரிடம், நிருபர்கள், ‘‘நீங்களும் தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவருகிறதே. உண்மையா’’ எனக் கேட்டனர். உடனே அவர் அதிமுக சின்னத்தை குறிப்பிடும் விதமாக இரண்டு விரல்களை உயர்த்தி காட்டி, எந்தவித பதிலும் அளிக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். செல்லூர் ராஜூவின் மவுனம் மதுரை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: