×

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை தவறாகச் சித்தரிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவருக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!

 

சென்னை: முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை தவறாகச் சித்தரிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவருக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சிறுபான்மை முஸ்லிம் சமூக மக்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் 3.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை, அவர்களின் மக்கள்தொகை மற்றும் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் 7 விழுக்காடாக உயர்த்தித் தர வேண்டும் என்பது அச்சமூக மக்களின் நீண்டகால, நியாயமான கோரிக்கையாகும். எஸ்டிபிஐ கட்சியும் தொடர்ந்து தமிழக அரசிடம் இக்கோரிக்கையை வலியுறுத்தி வருவதோடு, எல்லா சமூக மக்களுக்கும் சமூக நீதியின் அடிப்படையில் அவரவருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உயர்வு கோரிக்கையைத் தற்போதைய தமிழ்நாடு அரசிடம் கொண்டு சென்று உரிய முறையில் பரிசீலிப்போம் என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஊடகங்கள் வாயிலாக உறுதியளித்திருந்தார். இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆனால், அமைச்சரின் இந்த முற்போக்கான, சமூக நீதி அடிப்படையிலான பேச்சை, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கட்சியின் வழக்கமான மதவாதக் கண்ணோட்டத்தோடும், இடஒதுக்கீடு குறித்த அடிப்படையான புரிதலற்ற சிந்தனையோடும் அணுகியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் முஸ்லிம் சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது மதரீதியான இடஒதுக்கீடு அல்ல; மாறாக, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லிம்களுக்கான சமூக-பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடு ஆகும். இது முற்றிலும் சட்டரீதியானது, நீதியரசர்களின் ஆணையப் பரிந்துரைகளின்படி வழங்கப்பட்டது மற்றும் இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது ஆகும். அதே சட்டப்படியான வழிகளில்தான், தங்களது பின்தங்கிய நிலையைக் கருதி இடஒதுக்கீட்டை உயர்த்தித் தருமாறு முஸ்லிம்கள் அரசிடம் ஜனநாயகப் பூர்வமாகக் கோரிக்கை வைக்கிறார்கள். இந்த இடஒதுக்கீட்டின் வரலாறு குறித்தோ, அதன் சமூக நீதிப் பின்னணி குறித்தோ எந்தவொரு குறைந்தபட்ச புரிதலும் இல்லாமல்தான் ஒரு தேசிய கட்சியின் தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டில், பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு சமுதாயமும் தங்களுக்கான உரிமைகளையும் இடஒதுக்கீட்டையும் அரசிடம் கோருவது என்பது அடிப்படை அரசியல் சாசன உரிமையாகும். ஆனால், முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு மற்ற சமூகங்களுக்கான வாய்ப்புகளைப் பாதிப்பது போலவும், இடஒதுக்கீடு உயர்வு கோரிக்கையைத் தமிழக அரசு பரிசீலிக்கக் கூடாது என்றும் நயினார் நாகேந்திரன் பேசுவது, பொதுப்புத்தியில் நச்சுத்தன்மை வாய்ந்த பொய்களைத் திணிக்கும் முயற்சியே ஆகும். சமூகங்களுக்கிடையே பிரிவினையை உண்டாக்கி, அரசியல் லாபம் பார்க்கத் துடிக்கும் பாஜக தலைவரின் இந்த உண்மைக்குப் புறம்பான வாதங்கள் அடியோடு நிராகரிக்கப்பட வேண்டியவை.

அடிப்படையிலேயே இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் சமூக நீதிக்கும் எதிரான சித்தாந்தத்தைக் கொண்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர். அதனால்தான், சமூக நீதி அடிப்படையிலான இக்கோரிக்கையை நேர்மையாக எதிர்கொள்ள திராணியற்று, மதவாதச் சாயம் பூசி மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கச் செய்யப் பார்க்கிறார்கள். இடஒதுக்கீட்டுக்கு எதிரான கொள்கை உடையவர்கள் இதுபோன்று பிரிவினையைத் தூண்டுவது தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கத்திற்கும், அமைதிச் சூழலுக்கும் சற்றும் உகந்தது அல்ல.

தமிழ்நாட்டின் சமூக நீதிப் பாதுகாப்பாக விளங்கும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கே இன்று ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் டெல்லி ஆதிக்கத்தால் மிகப்பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கும் சூழல் நிலவுகிறது. தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளிலும் இடஒதுக்கீட்டிலும் உண்மையிலேயே நயினார் நாகேந்திரனுக்கு அக்கறை இருக்குமானால், முடிந்தால் அவர் டெல்லியில் உள்ள தனது கட்சியின் உயர்மட்டத் தலைவர்களான பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் பேசி, தமிழ்நாட்டின் இந்த 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையின்படி முழுமையாகக் காப்பாற்றிக் காட்டட்டும்.

அதை விடுத்து, சிறுபான்மையினரின் சட்டப்பூர்வமான கோரிக்கைகள் குறித்து தவறான கருத்துகளையும் பொய்களையும் கட்டவிழ்த்து விடுவதையும், சமூக நீதியின் தொட்டிலாக விளங்கும் தமிழ்நாட்டில் மதவாத அரசியலைத் திணிக்க முயல்வதையும் பாஜக உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களால் அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் பாஜக, இதுபோன்ற நச்சுத்தன்மை வாய்ந்த பிரிவினைவாதக் கருத்துக்களைப் பேசி தமிழ்நாட்டில் காலூன்றலாம் என நினைத்தால் அது பகற்கனவாகவே முடியும். தமிழ்ப் பெருங்குடி மக்கள் இத்தகைய மலிவான, மதவாத அரசியலைத் தமிழ் மண்ணில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : STBI ,Tamil ,Nadu ,BJP ,Chennai ,STBI party ,Tamil Nadu ,Mohammed Mubarak ,Tamil Nadu… ,
× RELATED “தமிழ்நாட்டில் இன்று எத்தனை பாலியல்...