×

“தமிழ்நாட்டில் இன்று எத்தனை பாலியல் வன்கொடுமைகள்?.. பதற வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள்: ஜவாஹிருல்லா அறிக்கை

 

சென்னை: “தமிழ்நாட்டில் இன்று எத்தனை பாலியல் வன்கொடுமைகள்?” என பதற வைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வெளிவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளன.

நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னை, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், தாம்பரம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றுள்ள கொடூரச் சம்பவங்கள், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து மிகுந்த கவலைக்குரிய கேள்விகளை எழுப்புகின்றன. “தமிழ்நாட்டில் இன்று எத்தனை பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுள்ள?” என்று மக்கள் வேதனையுடனும் பதற்றத்துடனும் கேட்கும் சூழல் உருவாகியுள்ளது.

வளர்ச்சி, முதலீடு, தொழில்நுட்ப முன்னேற்றம் என பெருமையாகப் பேசப்படும் தமிழகத்தில், பெண்களும் பெண் குழந்தைகளும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. போக்சோ சட்டத்தின் கீழ் தொடர்ந்து அதிகரித்து வரும் வழக்குகள், சமூகத்தின் ஒழுக்கச் சீரழிவை மட்டுமல்லாது, குற்றங்களைத் தடுக்க வேண்டிய பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறனையும் கேள்விக் குறியாக்குகின்றன.

குற்றவாளிகள் தண்டனையை அஞ்சாமல் செயல்படுகின்றனர் என்ற உணர்வு மக்களிடையே பரவி வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது எந்த அரசுக்கும் முதன்மை பொறுப்பாகும். “சிங்கப்பெண்” போன்ற திட்டங்களை அரசு மிகுந்த விளம்பரத்துடன் அறிவித்திருந்தாலும், பெண்களும் குழந்தைகளும் அச்சமின்றி வாழும் சூழல் புதிய ஆட்சியில் உருவாகாதது கவலைக்குரியது. குற்றங்கள் நடந்த பின் நடவடிக்கை எடுப்பதை விட, அவை நடைபெறாத சூழலை உருவாக்குவதே அரசின் உண்மையான கடமையாகும்.

பள்ளிகள், பொதுஇடங்கள், போக்குவரத்து மையங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை பலப்படுத்துவதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். *ஒரு நாகரிகமான சமூகத்தின் உண்மையான அளவுகோல் அதன் பெண்களும் குழந்தைகளும் எவ்வளவு பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. அந்த அடிப்படை பொறுப்பை நிறைவேற்றுவதில் அரசு தோல்வியடையக் கூடாது.

பெண்கள் அச்சமின்றி வாழவும், குழந்தைகள் பாதுகாப்பாக வளரவும் முடியாத சூழல் நீடித்தால், அது எந்த அரசுக்கும் பெருமை அல்ல; அந்த அரசின் மிகப்பெரிய தோல்வியாகவே வரலாறு பதிவு செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,Jawahirullah ,Chennai ,Humanity People’s Party ,MLA ,M.H. ,Tamil Nadu… ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து...