×

மதுராந்தகம் மோச்சேரி கிராமத்தில் வளைந்து செல்லும் சாலையில் பழுதான குறுகிய பாலம்: அகற்றி மேம்பாலம் அமைக்க கோரிக்கை

 

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட மோச்சேரியில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பழுதடைந்த குறுகிய பாலத்தை அகற்றிவிட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும். அதேபோல், மோச்சேரியில் வளைந்து தெளிந்து செல்லும் சாலையை நேர் சாலையாக சீரமைத்து அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட மோச்சேரி கிராமம் மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் பின்புறம் அமைந்துள்ளது. 1,500க்கும் மேற்பட்டோர் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் இங்கு வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்கு மதுராந்தகத்தில் இருந்து சென்னை-திருச்சி தேதிய நெடுஞ்சாலையை கடந்து திருவிக நகர் வழியாக மோச்சேரி சாலை செல்கிறது. அங்கிருந்து புதூர், அருந்ததி பாளையம் ஆகிய கிராமங்கள் வழியாக எல்.எண்டத்தூர் சென்று உத்திரமேரூரை சென்றடைகிறது. இச்சாலையில் கல்லூரியும் உள்ளது. இதனால், இச்சாலை எப்போதும் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். இதில், மோச்சேரி செல்லும் கிராமசாலை வளைந்தும், நெளிந்தும் குறுகிய சாலையாக உள்ளது. இந்த சாலை நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த சாலையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குறுகிய பாலம் உள்ளது. இந்த பாலம் மரங்கள் முளைத்து விரிசல் ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்துள்ளது.

இதன் காரணமாக கனரக வாகனங்கள் பாலப்பகுதியை கடந்து சென்றால் பாலத்தில் லேசான அதிர்வு ஏற்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.வளைந்து நெளிந்து செல்லும் குறுகிய நெடுஞ்சாலையை நேர்வழி சாலையாக மாற்றி இடித்து விழும் நிலையில் உள்ள பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக மேம்பாலம் கட்டினால் மோச்சேரி கிராமம் மேலும் வளர்ச்சிபெறும், குடியிருப்புகளும் அதிகரிக்கும், மதுராந்தகம் நகரின் எல்லையும் விரிவடையும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Matura ,Madurandkam Mocheri ,Maduranthakam ,Mocheri ,Maduranthakam Municipality ,Chennai-Trichy National Highway ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து...