பெரம்பலூர், ஜூன் 16: நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு அரசு அறிவித்த தினக்கூலி வழங்கிட வேண்டி பணி புறக்கணிப்பு செய்து பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஈபிஎப் தொகை ஊழியர்களின் கணக்கில் செலுத்தப்படாமல் உள்ளது. மாவட்ட கலெக்டர் அறிவித்த தினக்கூலி ரூ. 580 வழங்காமல், ஒப்பந்தக்காரர் நிர்ணயித்த தொகை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவித்த தினக் கூலி வழங்க வேண்டும்.
அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த ஈபிஎப் தொகையை முறையாக கணக்கில் செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்கள் பணிகளை புறக்கணித்து விட்டு, நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி நிர்வாகத்தினர், எம்எல்ஏ சிவக்குமார் ஆகியோர் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து சிறிது நேரத்தில் போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
