×

கொத்தவாசல் கிராமத்தில் மெட்டல் சாலையை தரம் உயர்த்த வேண்டும்: கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

 

பெரம்பலூர், ஜூன் 16: பெரம்பலூர் மாவட்டம் கொத்தவாசல் கிராமத்தில் இருந்து ஓ.கூத்தூர் கிராமத்திற்கு செல்லும் மெட்டல் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என கிராம பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஷரண்யா அறி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெரிய வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தவாசல் கிராம பொதுமக்கள் மற்றும் அரியலூர் மாவட்டம், சுப்புராயபுரம் ஓ.கூத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது : நாங்கள் பெரம்பலூர் உட்பட்ட கொத்தவாசல், புது குடிசை, நல்லறிக்கை, மேலமாத்தூர், வரிசைப்பட்டி, சின்ன வெண்மணி, பெரிய வெண்மணி மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சுப்புராயபுரம், ஓ.கூத்தூர், ஓ,கிருஷ்ணராயபுரம், நல்லாம்பத்தை ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்.

பெரம்பலூர், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு உட்பட்ட கொத்தவாசல் கிராமத்தில் இருந்து, அரியலூர் மாவட்டம், ஓ.கூத்தூர் கிராமத்திற்குச் செல்லும் மெட்டல் சாலையானது மிகவும் குண்டும் குழியுமாக இருக்கின்றது. இந்த மெட்டல் சாலையின் நீளம் 750 மீட்டர் மட்டுமே ஆகும். இந்த மெட்டல் சாலையின் வழியாக பள்ளி பேருந்துகள் விவசாய விளை பொருள்களை ஏற்றி செல்லும் டிராக்டர்களும் சென்று வருகின்றன. இந்த சாலையானது மெட்டல் சாலையாக அமைத்து 6 வருடங்கள் ஆகி விட்டதால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போய் இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்கின்றவர்கள் சறுக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த மெட்டல் சாலையை தார் சாலையாக மாற்றி தருமாறு மாவட்ட கலெக்டரிடம் இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

Tags : Kothavasal ,Perambalur ,Collector ,O. Koothur village ,Perambalur district ,Perambalur Collector’s Office… ,
× RELATED ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி சமையல் கூடத்தில் தீ விபத்து