ராஜபாளையம், ஜூன் 16: ராஜபாளையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேத்தூர் பஸ்நிலையம் முத்தாலம்மன் கோவில் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இங்கு மது அருந்தும் குடிமகன்களால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
மேலும் கோயில் அருகே கடை உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி வருகிற 22ம் தேதி பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இதை விளக்கி சேத்தூர் நகர செயலாளர் ராஜா, ஏஐஒய்எப் மாவட்ட செயலாளர் பகத்சிங், நிர்வாகிகள் அய்யணன், ராமர் உள்ளிட்டோர் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
