ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 16: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டெருமை முட்டி வாலிபர் படுகாயமடைந்தார். காட்டெருமை நடமாடுவதால் இரவு நேரங்களில் கிராமமக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் பகுதியை சேர்ந்தவர் வீரவேல்(20). இவர் நேற்று முன்தினம் மாலை ஊரின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த காட்டெருமை திடீரென வீரவேலின் நெஞ்சில் முட்டி தூக்கி எறிந்தது. இதில் படுகாயமடைந்த வீரவேல் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதி மக்கள் உடனடியாக காட்டெருமையை பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ரவி மீனா உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரேஞ்சர் சரண்ராஜ் தலைமையில் வனத்துறையினர் இரவு பகலாக டிரோன் மூலம் காட்ெடருமையை கண்காணித்து வருகின்றனர். இந்த காட்டெருமை தினமும் பல கிலோமீட்டர் தூரம் ஒவ்வொரு கிராமமாக சென்று வருகிறது. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லிராமகிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் முகாமிட்டுள்ளது. அதனை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காட்டெருமை நடமாடி வருவதால் கிராமப்புற பகுதியில் வசிப்பவர்கள் இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
