மதுரை, ஜூன் 15: மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்தவர் மும்தாஜ் பேகம் (65). இவரது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 2 மகள்கள், 4 மகன்கள் உள்ளனர். அனைவரும் அவரவர் குடும்பங்களுடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மகன்களில் ஒருவரான ஷாஜஹான், தாயின் வீட்டின் மேல் தளத்திலும், மற்றொரு மகனான தவ்பீக் முகமது தரை தளத்திலும் வசிக்கின்றனர். சகோதரர்களுக்கு இடையே தகராறு இருந்து வருகிறது. இதனால் தாய் மும்தாஜ் பேகம் வீட்டை பூட்டிவிட்டு, இளைய மகன் ஷேக் முகமதுவுடன் தங்கியுள்ளார்.
சம்பவத்தன்று இரும்பு கம்பியை எடுத்து கொண்டு பூட்டப்பட்ட வீட்டிற்கு மகன் தவ்பீக் முகமது வந்தார். வீட்டை தன் பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு கோரி கதவை உடைத்ததுடன் தாயை கொலை செய்வதாக மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரில் சிலைமான் போலீசார் தவ்பீக் முகமது மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
