*3 பேர் காயம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, சரக்கு வேன் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் வேன் டிரைவர் பலியானார். இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சிவசக்தி காலனியை சேர்ந்தவர் குப்புசாமி (59), சரக்கு வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலையில் பொள்ளாச்சியில் இருந்து 3 பேரை தனது சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பொள்ளாச்சி உடுமலை ரோடு கோலார்பட்டி தேசிய நெடுஞ்சாலை ரோடு இணைப்பு சாலையில் வந்து கொண்டிருக்கும்போது, எதிரே வேகமாக வந்த தண்ணீர் லாரி ஒன்று, குப்புசாமி ஓட்டிச்சென்ற சரக்கு வேன் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், குப்புசாமி மற்றும் வாகனத்தில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதையறிந்த கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சரக்கு வாகனத்தில் படுகாயத்துடன் இருந்த டிரைவர் உள்பட 4 பேரையும் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குப்புசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து, தண்ணீர் லாரி டிரைவர் சந்திராபுரத்தை சேர்ந்த கிஷோர் (24) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். நெடுஞ்சாலையோரமுள்ள இணைப்பு சாலையில் நடைபெற்ற விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் கூடியதால் பரபரப்பு உண்டானது.
