×

மம்தா எதிர்ப்பு அலை தீவிரம் 19 திரிணாமுல் காங். எம்பிக்கள் ஓம் பிர்லாவை சந்திக்க முடிவு: உண்மையான கட்சி நாங்கள் தான் என அறிவிக்க கோரிக்கை

புதுடெல்லி: மம்தாவுக்கு எதிராக திரண்டுள்ள 19 திரிணாமுல் எம்பிக்கள் அடுத்த வாரம் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து தங்களை உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்று அங்கீகரிக்க வலியுறுத்த உள்ளனர். மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா தோல்வி அடைந்ததால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ரிதப்ரதா தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 64 பேர் பிரிந்து சென்ற நிலையில் தற்போது 19 எம்பிக்கள் தங்களை உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் என்று அங்கீகரிக்க கோரி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் அடுத்த வாரம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிருப்தி எம்.பி.யான ஜெகதீஷ் சந்திர பர்மா பசுனியா கூறுகையில், ‘ எங்கள் தரப்பில் உள்ள 19 எம்பிக்கள் சார்பில் மக்களவை சபாநாயகரிடம் ஒரு மனுவை அளித்துள்ளோம்.

வரும் திங்கள்கிழமை சபாநாயகரைச் சந்தித்து, உண்மையான டிஎம்சி நாடாளுமன்றக் குழுவை அமைப்பதற்கான எங்கள் கோரிக்கையை முன்வைப்போம் ’ என்றார். இந்த அறிவிப்புக்கு மம்தா தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திரிணாமுல் அதிருப்தியாளர்களின் கோரிக்கைக்கு எந்தச் சட்ட அடிப்படையும் இல்லை. என்று மம்தா ஆதரவு எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறுகையில்,’துரோகம் இழைக்கும் டிஎம்சி மக்கள் பிரதிநிதிகளுக்குச் சட்டம் தெரியவில்லை. எம்.பி.க்களின் எண்ணிக்கை முக்கியமல்ல;

அசல் அரசியல் கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் இணைய வேண்டும். அந்த 19 துரோகிகளும் பதவி விலகிவிட்டு பாஜ சார்பில் போட்டியிட வேண்டும்’ என்றார். இதற்கிடையே மம்தா மீது அதிருப்தியில் உள்ள 19 எம்பிக்களின் பெயர்கள் மற்றும் கையொப்பங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று இணையத்தில் பரவியது. இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மம்தா ஆதரவு எம்பி கீர்த்தி ஆசாத் கூறுகையில்,’ ‘அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ நடைபெற்று வருகிறது. ஆனால் அது இதுவரை தோல்வியடைந்துள்ளது’ என்றார்.

* மம்தா மீது எப்ஐஆர் பதிவு
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது இரு சமூகங்கள் இடையே பகையை தூண்டுதல் வகையிலான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், மேற்கு வங்கா முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 9 அன்று கொல்கத்தாவின் எஸ்ப்ளனேட் பகுதியில் உள்ள மெட்ரோ சேனலில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பானர்ஜி பேசிய கருத்துகள் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Anti-Mamata wave ,Trinamool ,Congress ,Om Birla ,New Delhi ,Mamata ,Lok Sabha ,Speaker ,Trinamool Congress ,West Bengal assembly ,
× RELATED அளவிற்கு மேல் நச்சுத் தன்மை வாய்ந்த...