×

இந்தியாவுக்கு அறிவுரை கூற மேற்கத்திய நாடுகளுக்கு எவ்வித உரிமையும் இல்லை – வெளியுறவுத்துறை அமைச்சர் காட்டம்

டெல்லி: ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்த ஆயுதங்கள் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டி உள்ளார். பின்லாந்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய வெளியுறவு துறை அமைச்சர், பல ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு ஆயுதங்களை விற்று வந்துள்ளதை நினைவூட்டினார்.

எனவே இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை விமர்சிக்கவோ, இந்தியாவுக்கு மேற்கத்திய நாடுகள் அறிவுரை கூறவோ எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என்று உறுதிபட கூறி இருக்கிறார்.

தொடர்ந்து பேசிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவில் தயாரிக்கபட்ட ஆயுதங்களால் எந்தவொரு ஐரோப்பிய நாடும் இதுவரை தாக்கப்பட்டதில்லை என்றும், ஆனால் ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்த ஆயுதங்கள் பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

உக்ரைன் போருக்குப் பின் ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெயைச் சந்தையில் முழுமையாக வாங்கத் தொடங்கியதால், இந்தியாவின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்க வேண்டியிருந்ததாகவும் விளக்கினார். அதே போல உலகளாவிய கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்வதைத் தடுக்க, இந்தியாவை ரஷ்ய எண்ணெய் கொள்முதலைத் தொடருமாறு 2022-ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா கேட்டு கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

உக்ரைன்-ரஷ்யா போரில் இந்தியாவின் நடுநிலைப்பாட்டை விமர்சிப்பது முற்றிலும் நியாயமற்றது என்றும், உலகளாவிய எரிசக்தி சந்தையை சீராக வைத்திருக்கவே இந்தியா இந்த முடிவை எடுத்தது என்றும் விளக்கினார். இந்திய உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் ஜனநாயகம் குறித்து விமர்சிப்பவர்கள், முதலில் தங்கள் சொந்த நாடுகளில் நிலவும் வன்முறைகளையும் ஸ்திரமற்ற தன்மையையும் சரி செய்ய முயற்சிக்க வேண்டும் என்று கடுமையாக சாடினார்.

Tags : India ,External Affairs ,Minister ,S Jaishankar ,Delhi ,Union ,External ,Affairs ,Finland ,Russia ,Ukraine ,
× RELATED காலி மதுபாட்டிலுக்கு ரூ. 10 தரக்கோரி...