×

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 3.1 கி.மீ. உயரத்தில் வடக்கு கடலோர தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வடக்கு கடலோர தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் நாளை, நாளை மறுநாள் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் வரும் 15ஆம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,northern ,
× RELATED சென்னிமலை அருகே குடிநீர் கேட்டு மக்கள் திடீர் சாலை மறியல்