×

அமெரிக்கா இரண்டாவது நாள் தாக்குதல் பக்ரைன், ஜோர்டான், குவைத் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் பதிலடி: ராணுவ தளங்கள் குறிவைத்து அழிப்பு

துபாய்: ஈரான் மீது அமெரிக்கா இரண்டாம் கட்டமாக நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளை எதிர்த்து கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தியது. மேலும் உலகின் எண்ணெய், எரிபொருள் ஏற்றுமதிக்கு முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.

இதனால் வளைகுடா நாடுகளில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் அப்பாச்சி ரக நவீன ஹெலிகாப்டர், ஹார்மூஸ் நீரிணை அருகே சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த பதற்றமான சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் அத்துமீறிவிட்டதாக கூறி அமெரிக்கா ஈரானின் பல்வேறு நகரங்கள் மீது கடுமையான ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குல்களை நடத்தியுள்ளது.

ஈரானின் தேவையற்ற மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அமெரிக்க விமான படை, கடற்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. தாக்குதலின் போது ஏற்பட்ட வெடிச்சத்தங்கள், தெஹ்ரான் மற்றும் துறைமுக நகரான பண்டார் அப்பாஸ் ஆகிய பகுதிகளில் எதிரொலித்தன.

அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பக்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தியது. பக்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்களைத் தொடுத்தது. இதனை தடுக்கும் விதமாக அவ்விரு நாடுகளும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் பயன்படுத்தின.

அமெரிக்கப் படைகள் தங்கியிருந்த ஒரு விமானத் தளத்தை நோக்கி ஈரான் ஏவிய ஐந்து ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்டான் தெரிவித்துள்ளது. ஈரானிலிருந்து அஸ்ராக் நோக்கி ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகளை நாங்கள் இடைமறித்து சுட்டு வீழ்த்தினோம். இதன் விளைவாக ஏவுகணைகளின் பாகங்கள் சிதறி விழுந்தன. ஆனால் இதனால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று ஜோர்டான் ராணுவம் தெரிவித்தது.

* டிரம்ப் கடும் எச்சரிக்கை
இதற்கிடையே ஈரானை இன்றிரவு(நேற்று) கடுமையாக தாக்கவிருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.
அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று பதிவிடுகையில், ஈரானை இன்றிரவு(நேற்று) கடுமையாக தாக்குவோம் என்றும் கூடிய விரைவில் கார்க் தீவையும், எண்ணெய் வளமிக்க பிற கட்டமைப்புகளையும் கைப்பற்றப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

* குவைத் விமான நிலையம் மூடல்
ஈரானின் தாக்குதலை அடுத்து குவைத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குவைத்தில் உள்ள அந்நாட்டு நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் குவைத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. குவைத்திற்கு வந்த விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.

* ஹோர்முஸ் முழுவதுமாக மூடல்
அமெரிக்க படைகளின் தாக்குதல்களை தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்க ஹெலிகாப்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஜோர்டான், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் முழுவதுமாக மூடப்படுவதாக ஈரான் புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

* 10 கோடி பேரல் கடத்தல்: டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை முற்றுகையின் போது 10 கோடி பேரல் எண்ணெயை ரகசியமாக கடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதிபர் டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசுகையில், அந்த நீர்வழிப்பாதை வழியாகப் போக்குவரத்துக்கான ஈரானின் கட்டுப்பாடுகளை மீறி, பதற்றமான சூழல்களுக்கு மத்தியிலும் அமெரிக்கா ஹோர்முஸ் பகுதியிலிருந்து 10 கோடி பேரல் எண்ணெயைக் கள்ளத்தனமாக வெளியேற்றியதாக தெரிவித்தார். அதனால்தான், ஈரானுக்கு எதிரான போரின் ஆரம்ப வாரங்களில் இருந்தது போல ஒரு பேரல் 100 டாலருக்கு மேல் நிலைத்திருக்காமல், சமீப நாட்களாக எண்ணெய் விலைகள் ஒரு பேரலுக்கு சுமார் 90 டாலரைச் சுற்றி வருகின்றன என்று டிரம்ப் கூறினார்.

Tags : US ,Iran ,Bahrain ,Jordan ,Kuwait ,Dubai ,Gulf ,Israel ,
× RELATED போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரானின்...