குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல் அரசு பஸ் சிறைபிடிப்பு

கலசபாக்கம், ஜூன் 11: கலசபாக்கம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் சிறுவள்ளூர் ஊராட்சி அய்யம்பாளையம் கிராமத்தில் கோடைகாலத்தில் நீர் ஆதாரம் குறைந்ததால் சீரான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் அய்யம்பாளையம் கூட்டு சாலையில் நேற்று காலை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் ஆதமங்கலம் புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சீரான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும் உடனடியாக ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின்பேரில் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர் இதனால் அரை மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Related Stories: