விவசாய நிலத்தில் சாராய ஊறல் கண்டுபிடிப்பு: நாடக நடிகர் உள்ளிட்ட 2 பேர் கைது

வந்தவாசி, ஜூன் 9: வந்தவாசி அருகே 20 வருடங்களுக்கு பிறகு விவசாய நிலத்தில் சாராய ஊறல் போலீசார் கண்டுபிடித்து நாடக நடிகர் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் சாராய ஊறல் ஏற்படுத்தி புதிய பஸ் நிலையம் இணைப்புச் சாலை பகுதியில் உள்ள பூக்கடையில் சாராயம் விற்பனை செய்வதாக டிஎஸ்பி சதீஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி உத்தரவின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று அத்திப்பாக்கம் கிராமத்தில் உள்ள கமல் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சாராய ஊறல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் நிலத்தின் உரிமையாளர் கமல் (50) தெருக்கூத்து நாடக நடிகர் இவரது உறவினர் புண்ணியகோட்டி(60) சாராயம் காய்ச்சி இதனை சொந்த தேவைக்காக பயன்படுத்திக் கொண்டும், அதேபோல் புதிய பஸ் நிலையம் இணைப்புச் சாலை பகுதியில் பூக்கடை வைத்திருக்கும் எரமலூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி(40) என்பவர் மூலமாக அப்பகுதியில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கமல் செல்வமணி இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள புண்ணியக்கோட்டியை வலை வீசி தேடி வருகின்றனர். வந்தவாசி பகுதியில் டாஸ்மாக் கடை ஏற்படுத்திய பிறகு சுமார் 20 வருடங்களாக கள்ளச்சாராயம் இல்லாத நிலையில் தற்போது ஊறல் அமைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த முதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: