சகாரன்பூர்: உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் தேர்வு எழுத வந்த மனைவியின் கண்முன்னே கணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவ் குமார் (24). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அகான்ஷா என்பவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று சகாரன்பூர் மாவட்டம் ராம்பூர் மணிகரன் பகுதியில் உள்ள கோச்சர் கல்லூரியில் நடந்த போலீஸ் பணிக்கான தேர்வு எழுத அகான்ஷா வந்துள்ளார்.
அப்போது தனது மனைவியை தேர்வு மையத்திற்கு அழைத்து வந்த சிவ் குமார், அவர் தேர்வு எழுதிவிட்டு வரும் வரை மையத்தின் வெளியே காத்திருந்தார். இந்நிலையில் தேர்வு மையத்தின் வெளியே நின்றிருந்த சிவ் குமாரை, அகான்ஷாவின் சகோதரர் மஞ்சித் என்பவர் திடீரென நெருங்கி வந்து துப்பாக்கியால் தலையில் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிவ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிவ் குமாரின் மனைவி அகான்ஷா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘எங்கள் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த எனது சகோதரர் மஞ்சித் தான் எனது கணவரை சுட்டுக்கொலை செய்தார்’ என்று கூறினார். உயிரிழந்த சிவ் குமாரின் சகோதரர் சிவம் குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

