சென்னை: தமிழ்நாட்டில் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் ஆற்றங்கரைகள் மற்றும் குறிப்பாக கடற்கரைகள் போன்ற திறந்த பொது இடங்களில் கூடுவார்கள். அதிக அளவிலான மக்கள் கூடுவதால் சென்னையின் கடற்கரைகளில் அதிக அளவு திடக்கழிவுகள் குவிவது வழக்கம். 2025ம் ஆண்டு காணும் பொங்கலின் போது முக்கிய கடற்கரைப் பகுதிகளான மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் 44 டன்களுக்கும் அதிகமான குப்பை குவிந்தது தொடர்பாகவும், பெரிய அளவிலான பொதுக் கூட்டங்களை கையாள்வதில் கழிவு மேலாண்மை அமைப்புகளின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதுதொடர்பாக வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. விசாரணையின் போது, தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் கொண்டாட்டங்களின் போது சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் ஜனவரி 1, 2026 அன்று அறிக்கை சமர்ப்பித்தது.
மேலும், அரசின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பொது இடங்களில் குப்பை தொட்டிகள் வைத்தல், மீண்டும் மஞ்சள் பை, மாநில அளவிலான வழிகாட்டுதல்கள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதேபோல், சென்னை மாநகராட்சியும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததாகவும், குப்பையை உடனடியாக அகற்றுவதற்கு போதுமான தூய்மைப் பணியாளர்களை நியமித்ததாகவும் அறிக்கை அளித்தது.
இந்நிலையில், பசுமை தீர்ப்பாயம் நேற்று வழங்கிய தீர்ப்பில் பல்வேறு வழிகட்டுதல்களை வழங்கியுள்ளது.
அதில், தமிழகம் முழுவதும் கடலோரப் பகுதிகள், கடற்கரைப் பகுதிகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் நகர்ப்புற, உள்ளாட்சி அமைப்புகள் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026ஐ கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அதிக மக்கள் கூடும் நிகழ்வுகளில் போதுமான தூய்மைப் பணியாளார்கள், எதிர்பார்க்கப்படும் மக்கள் கூட்டத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை உறுதிசெய்து, நிகழ்வுக்கு முந்தைய சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்தை போதுமான அளவு முன்கூட்டியே தயாரித்துச் செயல்படுத்த வேண்டும்.
குப்பை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் கழிவுகளைப் பொறுப்புடன் அகற்றுவதை ஊக்குவிக்க நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்தலாம். ஆமைகள் முட்டையிடும் மற்றும் குஞ்சு பொரிக்கும் பருவம் (ஜனவரி முதல் மே வரை) போன்ற உணர்திறன் மிக்க காலகட்டங்களில், சூழலியல் உணர்திறன் மிக்க பகுதிகளைக் கண்டறிந்து பாதுகாப்பது உள்பட கடல்சார் சூழலியலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும்.
மாநகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் பாதசாரிகளின் பாதுகாப்பான நடமாட்டத்திற்கும், வாகனங்கள் தடையின்றி செல்வதற்கும் வசதியாக, அதிகமான மக்கள் கூடும் போதும் மற்றும் வழக்கமான நாட்களிலும் நடைபாதைகளில் விற்பனையாளர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்காக, அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதசாரிகளின் பாதைகள் தடையின்றி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் தங்களின் கண்காணிப்புகளை வலுப்படுத்த வேண்டும், வழக்கமான ஆய்வுகளை நடத்த வேண்டும், முறையான பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும். மேலும், முக்கிய பொது நிகழ்வுகளின் போது கழிவு சேகரிப்பு, கையாளுதல் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அவ்வப்போது தங்களின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்கி, வழக்கை முடித்து வைத்தது தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்.
