சென்னையில் கந்தக புகை காற்றில் பரவிய விவகாரம் மாசுகட்டுப்பாடு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னையில் கந்தகப் புகை காற்றில் பரவியதற்கு என்ன காரணம் என்பது தொடர்பாக மாசுகட்டுப்பாடு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தென்மண்டல பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் 2ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள பகுதிகள், காமராஜர் சாலை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் புகை மூட்டமாக காணப்பட்டது. புகையினால் அந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் இருந்த காவல்துறையினர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மூச்சுத் திணறல், இருமல், கண் எரிச்சல் உள்ளிட்ட அசவுகரியத்தைச் சந்தித்தனர்.

அப்போது, கடும் வெயிலின் தாக்கத்தால் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த கந்தகம் வேதியியல் மாற்றத்திற்கு உள்ளாகி வெண்புகையாக காற்றில் கலந்ததாக காரணம் கூறப்பட்டது. தொடர்ந்து, துறைமுக அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு புகை வெளியேற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து, புகை வெளியேறிய பகுதிகளில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்தனர். மேலும், துறைமுக நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தல் வழங்கினார்கள்.

இந்நிலையில், அப்போது வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாய அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கார்கவா ஆகியோரின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வாயுக்கசிவு தொடர்பாக மாசுகட்டுப்பாடு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எதனால், வாயுக்கசிவு ஏற்பட்டது. கந்தகம் மூடிய கொள்கலனில் இருந்ததா அல்லது திறந்த வெளியாக இருந்ததா என்று கேள்வி எழுப்பினர். மேலும், கந்தகத்தை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான வழிமுறைகள் என்ன, இனி இதுபோன்று நிகழாமல் இருக்க என்ன வேண்டும் உள்ளிட்டவை குறித்து அறிக்கையில் விளக்கவேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: