கிள்ளியூர் தொகுதி தேர்தல் முடிவில் முறைகேடு அமைச்சர் ராஜேஷ்குமாரின் வெற்றியை எதிர்த்து த.வெ.க வேட்பாளர் புகார்: மறுவாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையத்திடம் மனு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் 66,434 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் சபின் 65,123 வாக்குகள் பெற்று 1311 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தவெக அரசை காங்கிரஸ் கட்சி ஆதரித்த நிலையில் ராஜேஷ்குமார் சுற்றுலா துறை அமைச்சராக உள்ளார்.

இந்தநிலையில் கிள்ளியூர் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் தொழில்நுட்பக் குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறி, மறுவாக்கு எண்ணிக்கை மற்றும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தவெக வேட்பாளர் எஸ்.சபின் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையர், தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர், மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த மே 4-ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது, தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளது. 4,500 தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில், வெறும் 2,500 தபால் வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போதே தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டபோது, இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன் உரிய தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அதை நிறைவேற்றப்படாமலே தேர்தல் முடிவுகள் அவசரகதியில் அறிவிக்கப்பட்டது.

மேலும் 169-வது வாக்குச்சாவடி இயந்திரத்தில், வாக்குப்பதிவு தொடங்கிய நேரம் காலை 5:45 மணி என்று காட்டப்பட்டுள்ளது. தேர்தல் தொடங்குவதற்கு முன்பே இயந்திரம் செயல்பட்டது போன்ற இந்தத் தொழில்நுட்பக் கோளாறு, அந்த இயந்திரத்தின் நேர்மை குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதேபோல் 76-வது வாக்குச்சாவடியிலும் இயந்திரக் கோளாறு காரணமாக பதிவான வாக்குகளைச் சரிபார்ப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

இதுபற்றி வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பலமுறை முறையிட்டும் தேர்தல் அதிகாரிகள் எவ்வித தீர்வும் வழங்கவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, எவ்வித விசாரணையும் இன்றி முடிவுகள் அறிவிக்கப்பட்டது ஜனநாயக விரோதமானது. எனவே, தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்ட வாக்குச்சாவடி எண்கள் 76 மற்றும் 169 ஆகியவற்றில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்.

மற்ற அனைத்து வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை மீண்டும் ஒருமுறை முறையாக எண்ண வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் இறுதி சுற்றுகளான 18, 19, 20, 21 மற்றும் 22 ஆகிய சுற்றுகளில் வெளிப்படைத்தன்மை முற்றிலுமாக மீறப்பட்டுள்ளது. 18, 19 மற்றும் 20 ஆகிய சுற்றுகளின் முடிவுகளை தனித்தனியாக அறிவிக்காமல் 21,22 சுற்றுகளுடன் இணைத்து அறிவித்துள்ளனர் என்றும் சபின் மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: