மரக்காணம் அருகே சிக்கன் தந்தூரி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு வாந்தி, பேதி

மரக்காணம், ஜூன் 8: மரக்காணம் அருகே கோமுட்டி சாவடி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் நேற்று முன்தினம் மாலை புதுவையில் உள்ள ஒரு பிரபல தனியார் ஓட்டலில் 1 கிலோ சிக்கன் தந்தூரி வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதை மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த சுமிதா (27), பிரவீன் (28), தீபக் (18), ஆகாஷ் (28), இலக்கியா (3), யாஷிகா (4), அபர்ணா (20), அபி (25), ரோஷன் (10) ஆகியோர் சாப்பிட்டுள்ளனர். இவர்கள் சிக்கன் தந்தூரியை சாப்பிட்டு விட்டு இரவு வழக்கம் போல் தூங்கியுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் அனைவருக்கும் நேற்று காலை திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியான இவர்கள் அனைவரும் மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிக்கன் தந்தூரியை சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Stories: