தேனி, ஜூன் 8: சென்னை-போடி வரும் ரயில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். போடியில் இருந்து மதுரைக்கு நாள்தோறும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல வாரத்தில் ஆறு நாட்களுக்கு போடியில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி, வேலூர் வழியாக சென்னைக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மதுரையில் இருந்து போடிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணிகள் ரயில் காலை 9 மணிக்கு தேனி ரயில்நிலைய சந்திப்பை அடைகிறது. இதேபோல காலை 9.15 மணிக்கு சென்னையில் இருந்து வரும் ரயில், தேனி ரயில் நிலைய சந்திப்பை அடைகிறது. இவ்விரு ரயில்களிலும் நாள்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகள் தேனிக்கு வருகின்றனர்.
தேனி ரயில் நிலையம், தேனி நகரில் இருந்து சற்று தொலைவில் போக்குவரத்து வாகன வசதியில்லாத இடத்தில் உள்ளது. இதனால், தேனி ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் அங்கிருந்து ஆட்டோக்களில் செல்ல வேண்டுமானால் குறைந்த பட்சம் ரூ.150 முதல் ரூ.200 வரை ஆட்டோக்கள் கட்டணம் வசூலிக்கின்றன. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் காலையில் அரசு பஸ், ரயில்நிலையத்திறகு இயக்கப்படுகிறது. ஆனால் இந்த அரசு பஸ்சானது, மதுரையில் இருந்து போடிக்கு செல்லும் பயணிகள் ரயில் வரும்போதும், சென்னையில் இருந்து போடி செல்லும் ரயில் தேனி வரும்போதும், வருவதில்லை. இதனால் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணங்களை செலுத்தி பயணிகள் சென்று விடுகின்றனர். எனவே, அரசு போக்குவரத்துக்கழகம், ரயில் வருகையொட்டி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
