×

விஜய்யின் தீவிர ரசிகையான என்னை ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ பெயரை கூறி அழைத்து சென்று கூட்டு பலாத்காரம்: பாதித்த பெண் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ பெயரை கூறியே அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர் என்று பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர், தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகியாக இருந்தார். இவரது நண்பர், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜெயபால்.

இவரும் தவெக நிர்வாகி. இருவரும் ஏரல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை வேலை வாங்கித் தருவதாக கூறி காரில் அழைத்துச் சென்று ராமநாதபுரம் அருகே ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவரை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண், இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிந்து பாலசுப்பிரமணியன், ஜெயபால் ஆகியோரை கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் 1997 முதல் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை. தொடர்ந்து அவரது ரசிகர் மன்றத்திலும் செயல்பட்டு வந்தேன். கடந்த 2 வருடமாக, தற்போது ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ அன்னை விஜி சரவணனுடன் இணைந்து கட்சிப் பணியாற்றி வருகிறேன். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பாலா என்பவர் கட்சி ரீதியாக என்னிடம் பழக்கமானார்.

தற்போது எம்எல்ஏவாக உள்ள சரவணன் நடத்தி வரும் லாட்டரி தொழிலில் கமிஷன் மட்டும் வாங்கித் தருவோம். அதற்கு அக்கவுண்ட் ரெடி செய்து தாருங்கள் என்று பாலா கூறினார். அதன் பிறகுதான் தமிழ்நாட்டில் லாட்டரி தொழில் கிடையாது. அதை செய்தால் நம்மை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று அறிந்தேன். எனவே அதை செய்து தர மாட்டேன் என்று கூறினேன். மேலும் என்னிடம் இருந்த பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டு அவரிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டேன். 7 மாதத்திற்கு பிறகு தேர்தல் பணியின்போது மீண்டும் அவரை பார்த்தேன்.

அவர் என்னிடம் உங்களுக்கு ஒரு வேலை ரெடி செய்துள்ளேன் என்றார். தொடர்ந்து மே 3ம் தேதி சரவணன் நடத்தும் லாட்டரி மூலம் உங்களுக்கு வேலை ஏற்பாடு செய்து தருகிறேன். நீங்கள் தற்போது கடன் தொல்லையால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதற்காக நாம், ராமநாதபுரம் சென்று ஏஜெண்டை பார்க்க வேண்டும் என்று அழைத்தார். அதற்கு நான் சரவணன் அண்ணனுடையதா என்று கேட்கவும் ஆமாம் என்று கூறினார்.

அவரின் அழைப்பை நம்பி நானும், அவரது காரில் சென்றேன். காரில் செல்லும்போது எனக்கு குடிக்க கலர் பாட்டிலில் ஏதோ கலந்து கொடுத்தார். அதை குடித்து நான் மயக்கமடைந்தேன். அவருடன் மற்றொருவரும் சேர்ந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் நான் கேட்டபோது, உன்னை சரவணன் தான் கூட்டி வரச்சொன்னார் அவரிடம் கேட்டுக் கொள் என்றனர். இதுகுறித்து வெளியே கூறினால் உனது குழந்தையை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள்.

மறுநாள் தேர்தல் முடிவு வந்தது. அதன்பிறகு 3 நாள் கழித்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடமே கேட்டேன். உங்கள் பெயரைச் சொல்லி என்னை கூட்டிச் சென்று இப்படி நாசம் செய்து விட்டார்கள் என்று கூறினேன். அதற்கு இதையெல்லாம் நீங்கள் பெரிதுபடுத்தாதீர்கள், இதுகுறித்து புஸ்சி அண்ணனிடம் சொல்லி ஒரு வேலை வாங்கி கொடுத்து சரி செய்து விடலாம் என்று சரவணன் என்னிடம் தொலைபேசியில் கூறினார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டது என்னோடு சேர்ந்து மற்றொரு பெண்ணும்.

அந்த பெண் இதுகுறித்து வெளியே சொல்ல வேண்டாம் என்று என் காலில் விழுந்து அழுதார். தற்போது இந்த சம்பவத்தால் எங்கள் ஊரைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் என்னை தரக்குறைவாக பார்க்கிறார்கள். அனைத்து கட்சியினரும் என்னை வந்து சந்தித்து ஆறுதல் கூறினார்கள். நான் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து சென்னையில் உள்ள அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ஜெகதீஸ்வரி ஆகிய இருவரிடமும் புகார் மனு கொடுத்தேன். ஆனால் நான் பயணிக்கும் தவெக நிர்வாகிகள் யாரும் இதுகுறித்து என்னிடம் பேசவில்லை. ஆறுதல் கூறவில்லை. இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.

* தற்போது எம்எல்ஏவாக உள்ள சரவணன் நடத்தி வரும் லாட்டரி மூலம் உங்களுக்கு வேலை ஏற்பாடு செய்து தருகிறேன். நீங்கள் தற்போது கடன் தொல்லையால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதற்காக நாம், ராமநாதபுரம் சென்று ஏஜெண்டை பார்க்க வேண்டும் என்று அழைத்தார்.

* இதையெல்லாம் நீங்கள் பெரிதுபடுத்தாதீர்கள், இதுகுறித்து புஸ்சி அண்ணனிடம் சொல்லி ஒரு வேலை வாங்கி கொடுத்து சரி செய்து விடலாம் என்று எம்எல்ஏ சரவணன் என்னிடம் தொலைபேசியில் கூறினார்.

* நீதி வேண்டும்
பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ‘‘விஜய் நடித்த தெறி படத்தில் குற்றவாளிகளுக்கு கொடுக்கும் தண்டனை போல் இவர்களுக்கும் கொடுக்க வேண்டும். விஜய் ரசிகையாக இருந்த பாவத்திற்கு எனக்கு இது தேவையா? எனக்கு நீதி வேண்டும். முதல்வர் என்னை அழைத்து என்ன நடந்தது என்று கேட்க வேண்டும். இந்த மாவட்டத்திலேயே 2 அமைச்சர்கள் உள்ளார்கள். ஒருவரும் என்ன என்று கூட கேட்கவில்லை’’ என்றார்.

* பலாத்காரத்தில் தொடர்பா? எம்எல்ஏ விளக்கம்
பாதிக்கப்பட்ட பெண் புகார் குறித்து சரவணன் எம்எல்ஏ கூறுகையில், ‘‘கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வரை கேரளாவில் அங்கீகரிக்கப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தேன். தவெகவில் இணைந்த பிறகு முழு நேரமாக சமூக சேவையும், அரசியலும் செய்து வருகிறேன். கேரளாவில் செய்து வந்த லாட்டரி தொழில் விற்பனையை நிறுத்திவிட்டேன். அங்கு லாட்டரி தொழில் செய்ததால் லாட்டரி சரவணன் என கூறுவது உண்டு. தற்போது அந்த தொழில் செய்யாத நிலையில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் தவறான தகவலை தெரிவிக்கிறார்.

எனக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் சிலரது தூண்டுதலில் அவர் தவறான புகார் தெரிவிக்கிறார். கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். எம்எல்ஏ என்ற முறையில் பலர் என்னோடு இணைந்து புகைப்படம் எடுத்துச் செல்வதுண்டு. அவர்கள் செய்யும் தவறுகளுக்கு எப்படி நான் பொறுப்பாக முடியும். தவெக ஆட்சியில் தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும்’’ என்றார்.

Tags : Vijay ,Srivaikundam Thaveka MLA ,Balasubramanian ,Arumugamangalam ,Airal ,Thoothukudi ,Thaveka ,Thoothukudi… ,
× RELATED திருச்செந்தூர் கோவில் முறைகேடுகள்...