சென்னை: தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணிக்கு பெயர் வைத்திருப்பதாக அறிவித்துள்ள காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்திக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் அதிகபிரசங்கித்தனம் என கண்டித்துள்ளன. தமிழகத்தில் தவெக ஆட்சியை பிடிக்க, போதுமான மெஜாரிட்டி இல்லாததால் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயுஎம்எல் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுத்திருந்தன. எனவே பதிலுக்கு, காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளுக்கு தலா 1 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டிருந்தன. இடதுசாரிகள் அமைச்சர் பதவியை ஏற்க மாட்டோம், வெளியிலிருந்து தான் ஆதரவு என்று சொல்லிவிட்டன. இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்பி சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு தவெக ஒதுக்கியது. புதிதாக கட்சி தொடங்கி தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்த நிலையில், நாடாளுமன்றத்தில் முதல் தவெக எம்பி பதவி ஏற்பார் என்று அக்கட்சியினர் காந்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா சீட்டை தவெக ஒதுக்கியது தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளானது.
அதுபற்றிய பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரசில் குழப்பத்தை ஏற்படுத்தி அக்கட்சியை தவெகவுக்கு அழைத்து வந்தததை பாராட்டி, காங்கிரசை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்திக்கு எம்பி பதவி வழங்கும் வகையில், தவெக அந்த சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது தெரியவந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பும் வகையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளரான பிரவீன் சக்கரவர்த்தி நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது.
அவர் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணியின் (தவெக+ காங்கிரஸ்+ விசிக+ ஐயூஎம்எல்+ இந்திய கம்யூனிஸ்ட்+ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) முதல் நாடாளுமன்ற வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை பெருமையாகவும், மிகப்பெரிய பொறுப்பாகவும் கருதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணி தொண்டர்களுக்கு உறுதயளிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த பதிவில், தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி என்று தவெக, காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளை குறிப்பிட்டுள்ளார். இதுதான் இப்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு, கூட்டணி என்று குறிப்பிட்ட கட்சி தலைவர்கள் எல்லாம் பிரவீன் சக்கவர்த்திக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது குழப்பங்களை ஏற்படுத்தியது போன்று இப்போதும் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் பிரவீன் சக்கரவர்த்தியின் நடவடிக்கைக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இதுவரை தவெக தரப்பிலோ அல்லது கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் தரப்பிலோ கூட்டணியின் பெயர் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், கூட்டணியின் பெயரை பிரவீன் சக்கரவர்த்தி தன்னிச்சையாக அறிவித்தாரா என்றும் அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது. மேலும், கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு மட்டுமே தெரிவித்துள்ளது. திமுகவுடன் கூட்டணி தொடர்கிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறவித்த பின்பும் பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த பதிவு அரசியல் களத்தில் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது டிவிட்டர் பதிவில், ‘‘புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ (எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது. கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை அதிக பிரசங்கித்தனம் என்று தான் சொல்ல வேண்டும்’’ என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளது போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
இது தவறானது. இத்தகைய கூட்டணி அமைப்பது குறித்தோ, குறிப்பிட்ட இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நாடவில்லை. தவெக ஆட்சி அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை வழங்கியது. ஆளுநர் ஆட்சி அல்லது மறைமுகமான பாஜ ஆட்சி அமைந்துவிடக் கூடாது, ஒன்றிய அரசின் சதி திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பளித்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் இந்த ஆதரவை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளது போன்ற ஓர் கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.அதேபோன்று, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசனும் கண்டனம் தெரிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவனும், புதிய கூட்டணி ஏற்படுத்தப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் வருத்தம் தெரிவித்தார்
மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீன் சக்கரவர்த்தியின் டிவிட்டர் பதிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆதரவு மட்டுமே, திமுகவுடன்தான் கூட்டணி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரும் பிரவீன் சக்கரவர்த்தியின் நடவடிக்கை ஆதரவு தெரிவித்த கட்சியினரின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
